அதிமுகவில் நான் நீடிக்கிறேன்- ஆயுர்வேத சிகிச்சையில் இருக்கிறேன்: நாஞ்சில் சம்பத்
அம்மா மறைந்த துயரத்தில் இருந்து நான் இன்னும் மீண்டு வரவில்லை , அதிமுகவில் இருந்து நான் விலகவில்லை என்று அக்கட்சியின் செய்தி தொடர்பாளர் நாஞ்சில் சம்பத் கூறியுள்ளார்.
சென்னை: ஜெயலலிதா மறைவிற்கு பிறகு அதிமுகவில் இருந்தும் அரசியலில் இருந்தும் நாஞ்சில் சம்பத் விலக இருப்பதாக சமூத வலைதளங்களில் தீயாக தகவல் பரவியது. அந்த தகவல் வெறும் வதந்தி எனவும், முழுப்பொய் எனவும் அவரது மகள் மதிவதனி மறுப்பு தெரிவித்திருந்தார்.
மதிமுக பொதுச் செயலாளர் வைகோவுக்கு அடுத்த நிலையில் தொண்டர்களால் மதிக்கப்பட்டவர். தமிழகம் முழுவதும் பல்வேறு கூட்டங்களில் கட்சிக்காக பேசியவர். பல போராட்டங்களிலும் பங்கேற்றார். இந்நிலையில், வைகோவுக்கும் இவருக்கும் கருத்து வேறுபாடு ஏற்படவே, கடந்த 2012ம் ஆண்டு மதிமுகவில் இருந்து அதிமுகவில் இணைந்தார். இதனையடுத்து கட்சியில் பொறுப்பு கொடுத்ததோடு, இன்னோவா காரும் பரிசளித்தார் ஜெயலலிதா.

நாஞ்சில் சம்பத்
கடந்த வெள்ளத்தின் போது பொதுக்குழு கூட்டம் நடைபெற்றது. இது குறித்து தொலைக்காட்சியில் பேட்டியளித்தார் நாஞ்சில் சம்பத், அப்போது துணை கொள்கை பரப்புச் செயலாளர் பதவி பறிக்கப்பட்டது. அதிமுகவின் செய்தி தொடர்பாளராக நீடித்தார் நாஞ்சில் சம்பத்.

ஜெயலலிதா மறைவு
ஜெயலலிதாவின் மறைவிற்குப் பின்னர் நாஞ்சில் சம்பத் ஊடகங்களில் முகம் காட்டவில்லை, பேட்டியும் தரவில்லை. இதனையடுத்து அவர் அதிமுகவை விட்டு விலகி திமுகவில் இணையப் போவதாக ஊடகங்களில் தகவல் வெளியானது. இதற்கு நாஞ்சில் சம்பத் மறுப்பு தெரிவித்துள்ளார்.

அதிமுகவில் இருந்து விலகவில்லை
சம்பத் வெளியிட்டுள்ள அறிக்கையில், அம்மா மறைந்த துயரத்தில் இருந்து நான் இன்னும் மீண்டுவரவில்லை, அந்த துயரம் இன்னும் என்னை துரத்தி கொண்டே தான் இருக்கிறது. ஒருவர் மறைந்தால் அது ஈடு செய்ய முடியாத இழப்பு என்று என்று வழக்கமாக சொல்வது உண்டு அனால் அதை என் வாழ்நாளில் இப்போதுதான் அம்மாவின் மறைவின் மூலம் உணர்கிறேன். இந்த நிலையில் என்னை குறித்து வரும் தவறான தகவல்கள் ஊடகங்களில் வந்து கொண்டு இருக்கிற செய்திகள் உண்மை இல்லை.

ஆயுர் வேத சிகிச்சை
உடல் நலிவுக்கான ஆயுர்வேத சிகிச்சையில் உள்ள நான் சிகிச்சையில் இருந்து மீண்டு வரும் வரை எந்த ஊடகங்களிலும் நான் முகம் காட்டவிரும்பவில்லை, அதிமுகவில் நான் நீடிக்கிறேன் அதனால் வதந்திகளை நம்ப வேண்டாம் என்று நாஞ்சில் சம்பத் கூறியுள்ளார். அதே நேரத்தில் அதிமுகவில் இருந்து நடிகை விந்தியா விலகிவிட்டதாக தகவல் வெளியாகி வருகிறது. இது குறித்து இதுவரை விந்தியா எந்த அறிக்கையும் வெளியிடவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.












Click it and Unblock the Notifications