"ஐ அம் வெயிட்டிங்".... தேமுதிக கூட்டணி குறித்து "தளபதி" மு.ஸ்டாலின் கருத்து!
சென்னை: தேமுதிகவுடன் திமுக கூட்டணி அமைந்தால் நல்லது என மக்கள் ஆவலாக எதிர்பார்க்கிறார்கள். அதே ஆவல் எனக்கும் உண்டு என திமுக பொருளாளர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.
கர்நாடகா கட்டும் மேகதாது அணை தொடர்பாக கடந்த ஞாயிறன்று திமுக தலைவர் கருணாநிதியைச் சந்தித்தார் தேமுதிக தலைவர் விஜயகாந்த். அரசியல் வட்டாரத்தில் இந்தச் சந்திப்பு பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. இந்த சந்திப்பின் மூலம், வரும் சட்டசபைத் தேர்தலில் இரண்டு கட்சிகளும் கூட்டணி வைக்கலாம் என்ற பேச்சு எழுந்துள்ளது.
இந்நிலையில், இது தொடர்பாக திமுக பொருளாளர் ஸ்டாலின் வார இதழ் ஒன்றுக்கு பேட்டி அளித்துள்ளார். அதில் அவர் கூறி இருப்பதாவது :-

விஜயகாந்த் திருமணம்...
சகோதரர் விஜயகாந்தின் திருமணம் மதுரையில் தலைவர் கருணாநிதி தலைமையில் மூப்பனாரின் முன்னிலையில் நடந்தபோது, மணமக்களை வாழ்த்தி பேசக்கூடிய வாய்ப்பு எனக்கும் கிடைத்தது. அதை இப்போது நினைத்துப் பார்க்கிறேன்.

தங்கப்பேனா...
தொடர்ந்து தலைவர் கருணாநிதி முதலமைச்சராக இருக்கும்போது, விஜயகாந்த் நடிகர் சங்கத் தலைவர். அப்போது கருணாநிதிக்கு விஜயகாந்த் ஒரு விழா எடுத்தார். அந்த விழாவில் கருணாநிதிக்கு ஒரு தங்கப் பேனாவை நினைவுப் பரிசாக அளித்தார். இது இன்னும் பொக்கிஷமாக கருணாநிதி கருவூலத்தில் இருக்கிறது.

பதில் வினை ஆற்றவில்லை...
இப்படி விஜயகாந்த் ஆரம்பம் முதலே தி.மு.க.வுடன் ஓர் இணைக்கமான சூழலையே பின்பற்றி வந்திருக்கிறார். ஆனால், தீவிர அரசியலுக்கு வந்த பிறகு பல்வேறு தருணங்களில் தி.மு.க.வை அவர் கடுமையாக விமர்சித்திருந்தாலும், அதற்கெல்லாம் தி.மு.க. பெரிதாக பதில் வினை ஆற்றியது இல்லை.

பழைய நினைவுகள்...
இந்த சூழலில்தான் அவர் மேகதாது அணை விவகாரம் தொடர்பாக தலைவர் கருணாநிதியை சந்திக்க வந்தார். பொதுப் பிரச்சனை பற்றி விவாதிக்க நடந்த சந்திப்பு அது. ஆனாலும், அப்போது அவர் தன் திருமண புகைப்படத்தை எடுத்து வந்து கருணாநிதியிடம் காட்டி பழைய நினைவுகளை பகிர்ந்துக்கொண்டார்.

நட்பு சூழல்...
இது அவர் மனதில் இருக்கும் நட்புச் சூழலையே காட்டுகிறது. சந்திப்பின்போது தலைவருக்கு விஜயகாந்தும் பரஸ்பரம் உடல்நலம் விசாரித்துக்கொண்டனர். தவிரவும் அவர் என்னை எப்போதும் ‘அண்ணன்' என்றுதான் அழைப்பார். நானும் அதே சகோதரப் பாசத்துடனே அவருடன் பழகி வருகிறேன்.

நட்பு பாராட்ட தவறவில்லை...
இதற்கு முன்புகூட நாடாளுமன்ற மேலவைத் தேர்தலின்போது தி.மு.க. சார்பில் நிறுத்தப்பட்ட கனிமொழியை எதிர்த்து அவர் கட்சி சார்பில் வேட்பாளரை நிறுத்தினார். அப்போது நடந்த தேர்தலில் வாக்களிக்க வந்தபோது கூட நாங்கள் நட்பாக பேசிக்கொண்டோம். இப்படிச் சந்திக்கும் தருணங்களில் நட்பு பாராட்ட இருவருமே தவறியது இல்லை.

கூட்டணி ஆவல்...
இந்த சந்திப்பு எதிர்வரும் சட்டமன்றத் தேர்தல் கூட்டணிக்கான அச்சாரமா? எனக்கேட்கிறீர்கள். ‘இப்படி ஒரு கூட்டணி அமைந்தால் நல்லது' என பொதுமக்கள் ஆவலாக எதிர்பார்க்கிறார்கள் என்பது மட்டும் உண்மை. அதே ஆவல் எனக்கும் உண்டு' என இவ்வாறு அதில் அவர் தெரிவித்துள்ளார்.












Click it and Unblock the Notifications