மறு ஜென்மத்தில் பழி வாங்குவேன்... ஃபேஸ்புக்கில் பகிர்ந்த சுவாதி
சென்னை: "மறு ஜென்மத்தில் நான் ரொம்ப பிஸியா இருப்பேன்... நான் பழிவாங்க நினைக்கும் நபர்களின் லிஸ்ட் நாளுக்கு நாள் அதிகரித்துக்கொண்டே போகிறது" இது கடந்த பிப்ரவரி மாதம் சுவாதி ஃபேஸ்புக் பக்கத்தில் பகிர்ந்த பதிவு. எதை நினைத்து அவர் இந்த பதிவை பகிர்ந்தார் என்று தெரியவில்லை. அந்த பதிவை பகிர்ந்த 4 மாதத்திற்கு அவருக்கு கொடூர மரணம் நிகழ்ந்து விட்டது.
கடந்த ஜூன் 24ம் தேதி வெள்ளிக்கிழமை வழக்கம் போலவே விடிந்தது சுவாதிக்கு. அதுதான் தனக்கான கடைசி விடியல் என்று அப்போது சுவாதிக்கு தெரிந்திருக்க நியாயமில்லை. காலை 6.30 மணிக்கு சுவாதியை ரயில் நிலையத்தில் இறக்கி விட்ட அப்பாவிற்கும் தெரியாது அதுதான் மகளை கடைசியாக உயிரோடு பார்ப்பது என்று.
இரண்டாவது பிளாட்பாரத்தில் நின்றிருந்த சுவாதியை நீளமான வெட்டுக்கத்தியால் வெட்டி சாய்த்து விட்டு தப்பி விட்டான் கொலையாளி.சுவாதியின் கொலைச்சம்பவம் நிகழ்ந்து 8 நாட்கள் ஆகிவிட்டன. எதற்காக இந்த கொலை நிகழ்ந்தது. இப்படி ஒரு கொடூர கொலையை ஏன் செய்தான் அந்த கொலையாளி என்ற கேள்வி போலீசார் மனதில் மட்டுமல்ல பொதுமக்களின் மனதிலும் குடைந்து கொண்டுதான் இருக்கிறது.
சுவாதியின் ஃபேஸ்புக்கில் 753 நண்பர்களாக இருக்கின்றனர். சுவாதியின் ஃபேஸ்புக் பக்கத்தில் அதிகம் பகிரப்பட்டுள்ளவை அலுவலகம் தொடர்பான மீம்ஸ்கள்தான். கொலை செய்யப்படுவதற்கு முன்பு ஒருவாரகாலமாகவே அவர் தனது ஃபேஸ்புக் பக்கத்தில் எந்த பதிவையும் பகிரவில்லை.
கடைசியாக ஜூன் 15ம் தேதி ஒரு பதிவை பகிர்ந்துள்ளார் சுவாதி. அதில், 'தவறு செய்துவிட்டோம் என்பதற்காக அதை நினைத்து வருந்திக்கொண்டே இருக்காதீர்கள் என்று குறிப்பிட்டிருக்கிறார். அதற்குப்பின் அவருடைய கணக்கில் இருந்து எந்த பதிவும் போடவில்லை.கடந்த 24ம் தேதியில் இருந்து 27ம் தேதி வரை சுவாதியின் ஃபேஸ்புக்கில் இருந்து படங்கள், பதிவுகள் ஊடகங்களில் வெளியிடப்பட்டன. சென்னை காவல்துறை வசம் வழக்கு ஒப்படைக்கப்பட்ட பின்னர் அவரது ஃபேஸ்புக் பக்கத்தை போலீசார் முடக்கிவிட்டனர்.
சுவாதி பயன்படுத்திய செல்போன் குறித்த தகவல் இதுவரையில் இல்லை. அதே நேரத்தில் சுவாதியின் பழைய ஸ்டேட்டஸ்களை, போலீசார், தீவிரமாக துருவி வருகின்றனர்.
அதில் கடந்த பிப்ரவரி மாதம் சுவாதி போட்டுள்ள பதிவு ஆச்சரியத்தை ஏற்படுத்தியுள்ளது. அதில் " மறு ஜென்மத்தில் நான் ரொம்ப பிஸியாக இருப்பேன். நான் பழிவாங்க நினைக்கும் நபர்களின் எண்ணிக்கை அதிகரித்துக் கொண்டே போகிறது" என்று பொருள் வரும்படியான பதிவு ஒன்றை பகிர்ந்துள்ளார்.
எந்த மனநிலையில் இப்படியொரு ஸ்டேட்டஸை சுவாதி போட்டார் என்பதற்கான விடையைத் தேடும் முயற்சியில் சைபர் க்ரைம் போலீஸ் டீம் தற்போது மும்முரமாக இறங்கியிருக்கிறது.
சுவாதியின் கடைசி பதிவு யாருக்கானது என்பது பற்றியும், அவருடைய மறுஜென்மம் பற்றிய பதிவு பற்றியும் சுவாதியின் நண்பர்களிடம் போலீசார் விசாரித்து வருகின்றனர்.