அப்பல்லோவில் ஜெ.வை ஒருமுறை கூட சந்திக்கவில்லை: ஓபிஎஸ் வேதனை !
ஜெயலலிதாவை சந்திக்க 75 நாட்களும் அப்பல்லோ மருத்துவமனைக்கு சென்றேன். ஆனால் ஒரு நாள் கூட என்னால் சந்திக்க முடியவில்லை என்று முதல்வர் பன்னீர்செல்வம் தெரிவித்துள்ளார்.
சென்னை: மறைந்த முன்னாள் முதல்வர் ஜெயலலிதா அப்பல்லோ மருத்துவமனையில் இருந்த பொழுது அவரை ஒரு நாள் கூட சந்திக்க முடியவில்லை என்று முதல்வர் பன்னீர் செல்வம் வெளிப்படையாக தெரிவித்துள்ளார்.
முதல்வர் ஓ.பன்னீர் செல்வம் தனது பதவியை ராஜினாமா செய்த பின்னர் அதிமுக பொதுச்செயலாளர் சசிகலா முதல்வராக பதவியேற்பதற்கான ஏற்பாடுகள் நடைபெற்று வருகின்றன.

இந்நிலையில் சென்னை மெரீனா கடற்கரையில் உள்ள ஜெயலலிதா சமாதியில் தியானம் செய்து விட்டு பின்னர் பேட்டி கொடுத்து தமிழக அரசியலில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தினார் ஓ.பன்னீர் செல்வம். அதைத் தொடர்ந்து அவரிடமிருந்து பொருளாளர் பதவியைப் பறித்தார் சசிகலா.
இதைத்தொடர்ந்து தனியார் தொலைக்காட்சிக்கு ஓ.பன்னீர் செல்வம் அளித்த பேட்டியில், ஜெயலலிதா மருத்துவமனையில் இருந்த பொழுது தினம்தோறும் அப்பல்லோ மருத்துவமனைக்கு சென்றேன். ஆனால் ஒரு முறை கூட அவரை நான் சந்திக்கவில்லை. இருப்பினும் சசிகலா தவிர வேறு யாரும் சந்தித்ததாக கேள்வி படவில்லை, பார்க்கவும் இல்லை. அவரை நான் சந்திக்காதது எனது துர்பாக்கியம் என்றே கருதுகிறேன்.
ஜெயலலிதா இறந்த பின் அனைத்து சக்திகளையும் இழந்து விட்டேன். 75 நாட்கள் தொடர்ந்து அப்பல்லோ சென்றாலும் என்னால் ஒரு நாள் கூட ஜெயலலிதாவை சந்திக்க முடியவில்லை. அவரின் மரணம் கேட்டு மிகவும் வருந்தினேன். அவரின் மரணம் குறித்து சந்தேகத்திற்குரிய கேள்வியை எழுப்ப என் மனம் ஒப்பவில்லை. நான் யாரையும் தவறாக குறிப்பிடவும் விரும்பவில்லை. இவ்வாறு அவர் கூறினார்.












Click it and Unblock the Notifications