அதிமுக அணிகள் இணைப்பா... அப்படி ஒன்றும் தெரியவில்லையே... டிடிவி தினகரன் பதில்
அதிமுக அணிகள் ஒன்றாக இணைவது தொடர்பாக எந்த அறிகுறியும் தெரியவில்லை என்று டிடிவி தினகரன் கூறியுள்ளார்.
கிருஷ்ணகிரி: ஓபிஎஸ், இபிஎஸ் அணிகள் இணைந்து அதிமுக ஒன்றாக செயல்படும் வாய்ப்புகளின் அறிகுறிகள் எதுவும் தெரியவில்லை என்று அதிமுக அம்மா அணியின் துணைப் பொதுச் செயலாளர் டிடிவி தினகரன் தெரிவித்துள்ளார்.
தேர்தல் ஆணையத்துக்கு லஞ்சம் கொடுக்க முயன்ற வழக்கில் திகார் சிறையில் அடைக்கப்பட்டிருந்த டிடிவி தினகரன் அண்மையில் ஜாமீனில் வெளியே வந்தார். வந்தவுடன் தீவிர அரசியலில் ஈடுபட முடிவு செய்து அதற்கான வேலைகளில் அதிக கவனம் செலுத்திவருகிறார்.

இந்த நிலையில், சொத்துக்குவிப்பு வழக்கில் பெங்களூரு பரப்பன அக்ரஹாரா சிறையில் அடைக்கப்பட்டுள்ள சசிகலாவை சந்திக்க டிடிவி தினகரன் சாலை மார்க்கமாக சென்னையிலிருந்து புறப்பட்டுள்ளார்.
பெங்களூரு செல்லும் வழியில் கிருஷ்ணகிரி மாவட்டத்தில் அதிமுகவினர் அவருக்கு உற்சாக வரவேற்பு அளித்தனர். அப்போது செய்தியாளர்களுக்கு தினகரன் அளித்த பேட்டியில், "அதிமுகவில் உள்ள அணிகள் இணைவதாக எந்த அறிகுறியும் தெரியவில்லை. எனது அடுத்தக்கட்ட நடவடிக்கைகளை எங்கள் கட்சியின் பொதுச் செயலாளர் சசிகலாவை சந்தித்து ஆலோசித்து, அவர் என்ன சொல்கிறாரோ அதன்படியே நான் செய்ய உள்ளேன்.
அதற்காகவே இப்போது பெங்களூரு செல்கிறேன். என்னைப்பற்றி சில அமைச்சர்கள் கூறியுள்ளது அவர்களின் சுயநலத்தை வெளிப்படுத்தியுள்ளது. தொண்டர்கள் எனக்கு உற்சாகம் தருகிறார்கள். சென்னையில் இருந்து எனக்கு வழி நெடுக எனக்கு தொண்டர்கள் வரவேற்பு அளித்து வருகிறார்கள்" என்று கூறினார்.












Click it and Unblock the Notifications