எந்தச் சூழ்நிலையிலும் சசிகலாவுடன் இணைந்து பணியாற்றமாட்டேன் - தீபா அதிரடி
வரும் பிப்ரவரி 24 ஆம் தேதி எனது பொது வாழ்க்கை முடிவு குறித்து அறிவிப்பேன் என தீபா தெரிவித்துள்ளார்.
சென்னை: எந்தச் சூழ்நிலையிலும் அதிமுக பொதுச் செயலாளர் சசிகலாவுடன் இணைந்து அரசியல் பணியாற்றும் சூழல் இல்லை என முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் அண்ணன் மகள் தீபா கூறியுள்ளார்.
அண்ணாவின் 48வது நினைவு தினம் இன்று அனுசரிக்கப்பட்டது. இதனையொட்டி சென்னை மெரினா கடற்கரையில் உள்ள அவரது நினைவிடத்திற்கு ஜெயலலிதாவின் அண்ணன் மகளான தீபா சென்று மலர் வளையம் வைத்து அஞ்சலி செலுத்தினார்.

பின்னர் சென்னை, தி.நகரிலுள்ள தனது இல்லத்தில் இன்று செய்தியாளர்களை சந்தித்தார் ஜெயலலிதாவின் அண்ணன் ஜெயக்குமாரின் மகளான தீபா. அப்போது அவர் கூறுகையில், நான் பொதுவாழ்வில் ஈடுபடுவதை சிலர் திட்டமிட்டு தடுத்து வருகின்றனர்.
அண்ணா நினைவு தினத்தை முன்னிட்டு அவரது சமாதியில் அஞ்சலி செலுத்த சென்றேன். ஆனால், எனக்கு முதலில் போலீஸ் அனுமதி அளிக்கவில்லை. விரைவில் தொண்டர்களை சந்திக்க திமிழகம் முழுவதும் சுற்றுப்பயணம் மேற்கொள்ள உள்ளேன். சுற்றுப்பயண அறிவிப்பு விரைவில் வெளியாகும். தொண்டர்களை நான் சந்திப்பதை அதிகாரத்தில் உள்ள சிலர் தடுக்க முயல்கின்றனர் எனக் குற்றம்சாட்டினார்.
மேலும், ஜல்லிக்கட்டு உள்ளிட்ட விவகாரங்களில் முதல்வர் பன்னீர்செல்வத்தின் செயல்பாடு நன்றாக உள்ளது. ஆர்.கே. நகர் தொகுதியில் மீண்டும் ஒருமுறை சுற்றுப்பயணம் செய்து மக்களின் கருத்தை கேட்டறிவேன். எந்தச் சூழ்நிலையிலும் சசிகலாவுடன் இணைந்து அரசியல் பணியாற்றமாட்டேன். வரும் பிப். 24ல் எனது பொது வாழ்க்கை முடிவை அறிவிப்பேன் என்றார்.












Click it and Unblock the Notifications