என்னை யாரும் கட்டுப்படுத்த முடியாது என்கிறார் குஷ்பு... இது காங்கிரஸ் மகளிரணி மல்லுக்கட்டு
சென்னை: தி.மு.க.,வில், எப்படி செயல்பட்டேன் என்பது ஊர், உலகம் அறியும். என்னை யாரும் கட்டுப்படுத்த முடியாது. இங்கிருக்கும் யாருக்கும், நான் பதில் சொல்ல வேண்டியதில்லை என்று காங்கிரஸ் கட்சியின் செய்தி தொடர்பாளர் குஷ்பு ஆவேசமாக கூறியுள்ளார்.
கோஷ்டி பூசலுக்கு பஞ்சமில்லாத கட்சி காங்கிரஸ் கட்சி என்றால் மிகையாகாது. தங்கபாலு, ப.சிதம்பரம், ஈவிகேஎஸ் இளங்கோவன் என ஆளுக்கு ஒரு திசையில் நவகிரகங்கள் போல திரும்பிக்கொண்டு அரசியல் செய்கின்றனர்.
தலைவராக உள்ள ஈ.வி.கே.எஸ் இளங்கோவனைப் பற்றி காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவர்கள் டெல்லிக்குப் படையெடுத்துச்சென்று சோனியா, ராகுல்காந்தியிடம் புகார் தெரிவிக்க சத்தியமூர்த்தி பவன் பரபரப்பானது.
இளங்கோவனுக்கு ஆதரவாக பேசுகிறேன் என்று சொல்லி பதிலுக்கு குஷ்புவும், சிதம்பரம், கார்த்தி சிதம்பரம் ஆகியோரை நம்பி, காங்கிரஸ் கட்சி இல்லை என்று கொளுத்திப்போடவே, திகு திகு என பற்றிக்கொண்டது.
கொடும்பாவி எரிக்க முயற்சி
குஷ்புவின் கருத்தைக் கண்டித்து, தமிழகம் முழுவதும் நேற்று, காங்கிரஸ் கட்சியினர், குஷ்பு உருவப் பொம்மைகளை எரிக்க முயன்றனர். முன்னாள் மத்திய அமைச்சர்கள் சிதம்பரம், தங்கபாலு தலையிட்டதை அடுத்து, அந்த முயற்சி கடைசி நேரத்தில் கைவிடப்பட்டது.
சிதம்பரம் ஆதரவாளர் அறிக்கை
குஷ்புவுக்கு பதிலடி கொடுக்கும் விதமாக, சிதம்பரம் ஆதரவாளரும், அகில இந்திய மகளிர் காங்கிரஸ் செயலருமான ஹசீனா சையது , 'சிதம்பரத்தை விமர்சிக்க, குஷ்பு தகுதியற்றவர். அவர், யாரை நம்பி இருக்கிறார் என்பதை, நாடறியும். கட்சிக்காக தங்களை அர்ப்பணித்துக் கொண்டவர்களைப் பற்றியும், தேசிய தலைவர்களை பற்றியும், சற்று நாவடக்கத்துடன் குஷ்பு பேச வேண்டும்' என்று நேற்று அறிக்கை வெளியிட்டார்.
குஷ்பு பதிலடி
இந்த அறிக்கைக்கு பதிலடி கொடுக்கும் விதமாக பேசிய குஷ்பு, சமீப காலமாக கட்சிக்குள் நடக்கும் கலாட்டா வருத்தத்தை ஏற்படுத்துகிறது. மாநில தலைவர் இளங்கோவன் செயல்பாடுகளை விமர்சித்தவர்கள், என்னையும் சேர்த்து, விமர்சிக்க ஆரம்பித்தனர். 'நடிகைகளை நம்பி, காங்கிரஸ் இல்லை' என, என்னை குறிப்பிட்டு, கார்த்தி சிதம்பரம் என்று குற்றம் சாட்டினார்.
நடிகைகள் என்றால் இளக்காரமா?
நடிகைகளை நம்பி காங்கிரஸ் இருக்கிறது என்று யார் சொன்னது; நடிகைகள் என்றால், அவருக்கு என்ன அவ்வளவு இளக்காரம்; இவர்களை விட, கூடுதலாக கட்சிக்கு உழைக்கிறோம். இளங்கோவனை அகற்ற நினைக்கும், கோஷ்டி தலைவர்கள், ஒரு நாளாவது, உணர்வுப்பூர்வமாக கட்சிக்காக செயல்பட்டதுண்டா? என்றும் கேட்டுள்ளார்.
நான் யாருடைய ஆதரவாளர்?
இளங்கோவனுக்கு எதிராக செயல்படுகிறவர்கள் பற்றி, தலைமைக்கு எடுத்துச் சொல்ல, டெல்லி சென்றேன்; அதில், தவறு இல்லை. அதற்காக என்னை, இன்னாருடைய ஆள் என, யாரும் முத்திரை குத்த முடியாது. அவர்கள் நினைப்பது போல, கட்சியில் எந்த மாற்றமும் நிகழாது.
நேரடியாக பதில் சொல்லாமே
என்னை கார்த்தி விமர்சித்ததால், அவரையும், அவரைப் போன்றவர்களையும் நம்பி, காங்கிரஸ் இல்லை என, நான் கருத்து சொல்ல வேண்டியதாகி விட்டது. என் கேள்விக்கு, நேரடியாக பதில் சொல்ல முடியாதவர்கள், சிலர் மூலமாக அறிக்கை விடுகின்றனர்.
யாருக்கும் பதில் சொல்லமாட்டேன்
தி.மு.க.,வில் இருந்தபோது, தலைமையை எதிர்த்து, கேள்வி கேட்டியா?' என்கின்றனர். தி.மு.க.,வில், எப்படி செயல்பட்டேன் என்பது ஊர், உலகம் அறியும். என்னை யாரும் கட்டுப்படுத்த முடியாது. இங்கிருக்கும் யாருக்கும், நான் பதில் சொல்ல வேண்டியதில்லை என்றும் குஷ்பு கூறியுள்ளார்.
காங்கிரஸ் கட்சியின் மகளிரணியில் நடக்கும் மல்லுக்கட்டு நல்ல வேடிக்கைதான் போங்க