நானும், இந்திய சினிமாவும் அனாதையாக நிற்கிறோம்... எம்.எஸ்.வி மறைவுக்கு எஸ்.பி.பி. இரங்கல்
சென்னை: மெல்லிசை மன்னர் எம்.எஸ்.விஸ்வநாதன் மறைவால் தானும், இந்திய சினிமாவும் அனாதையாக நிற்பதாக பாடகர் எஸ்.பி.பாலசுப்பிரமணியன் கூறியுள்ளார்.
உடல்நலக் குறைவு காரணமாக பழம் பெரும் இசையமைப்பாளர் எம்.எஸ்.விஸ்வநாதன் நேற்று சென்னையில் காலமானார். சாந்தோமில் உள்ள இல்லத்தில், அவரது உடல் அஞ்சலிக்காக வைக்கப் பட்டுள்ளது.
எம்.எஸ்.வி.யின் உடலுக்கு தமிழக அமைச்சர்கள், திரையுலகத்தினர் மற்றும் அரசியல் கட்சித்தலைவர்கள் நேரில் அஞ்சலி செலுத்தி வருகின்றனர். இன்று அவரது உடலுக்கு இறுதிச்சடங்கு நடைபெறுகிறது.
இந்நிலையில், அமெரிக்கா சென்றுள்ள பாடகர் எஸ்.பி.பி, மறைந்த எம்.எஸ்.வி உடலுக்கு இறுதி அஞ்சலி செலுத்த முடியவில்லையே என வேதனை தெரிவித்துள்ளார்.
இது தொடர்பாக அவர் தனது பேஸ்புக் பக்கத்தில் கூறியிருப்பதாவது:-
|
எனது ஆசான்...
எம்.எஸ்.விஸ்வநாதன் எனது ஆசான், எனது தந்தை, எனது இசை. எம்.எஸ்.விஸ்வநாதன் மறைந்துவிட்டார்.

ஏன் இந்த நிலை எனக்கு?
அவருக்கு நடந்து கொண்டிருக்கும் இறுதி அஞ்சலியில் கூட கலந்து கொள்ள முடியாத நிலை எனக்கு வர வேண்டுமா? அந்த அளவுக்கு சிறிய நல்லதைக் கூட நான் எனது வாழ்நாளில் செய்யத் தவறிவிட்டேனா என்ன. இந்த நேரத்தில் தானா அமெரிக்காவில் இருக்க வேண்டும்.

தெய்வீக இசை...
நானும், இந்திய சினிமாவும் அனாதையாக நிற்கிறோம். அவரது ஆன்மா சாந்தியடையட்டும். கண்ணதாசனும் வாலியும் எழுதி வைத்த பாடல்வரிகளுக்கு மேலிருந்து அவர் இசையமைக்க இருக்கும் தெய்வீக இசையை கேட்க முடியுமா?

வானில் முழு நிலவாக...
'ஆயர்பாடி மாளிகையில் தாய்மடியில் கன்றினைப் போல் மாயக்கண்ணன் தூங்குகின்றான் தாலேலோ' வானில் முழு நிலவாக இருக்கிறார் அவர்" என இவ்வாறு அதில் அவர் தெரிவித்துள்ளார்.












Click it and Unblock the Notifications