மாஜி மத்திய அமைச்சர் ஜெகத்ரட்சகன் வீட்டில் ஐடி சோதனை முடிந்தது: ரூ. 15 கோடி பணம் பறிமுதல்
சென்னை: திமுக முன்னாள் மத்திய அமைச்சர் ஜெகத்ரட்சகனின் வீடு, அலுவலகம் உள்ளிட்ட இடங்களில் வருமான வரித்துறையினர் கடந்த 2 நாட்களாக நடத்திவந்த சோதனை இன்று முடிவுக்கு வந்துள்ளது. கணக்கில் வராத 15 கோடி ரூபாயும் பறிமுதல் செய்யப்பட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
கடந்த சில ஆண்டுகளாக ஜெகத்ரட்சகனுக்கு சொந்தமான கல்வி நிறுவனங்கள், மதுபான தயாரிப்பு ஆலைகள் வரி ஏய்ப்பு செய்ததாக கிடைத்த புகாரின் அடிப்படையில் வருமானவரித்துறை அதிகாரிகள் கடந்த 3 நாட்களாக தொடர்ந்து விசாரணை மேற்கொண்டனர்.
ஜெகத்ரட்சகனின் வீடு, அலுவலகம், கல்விக்குழுமங்கள், மதுபான தயாரிப்பு ஆலைகள் என தமிழகம் மற்றும் புதுச்சேரியில் 30க்கும் மேற்பட்ட இடங்களில் இன்று காலையும் சோதனை நீடித்தது. அடையாறில் உள்ள ஜெகத்ரட்சகனின் வீட்டில் அதிகாரிகள் விசாரணை நடத்தினர்.
ஜெகத்ரட்சகனிடம் நேற்று நடத்திய விசாரணையை அடுத்து வரி ஏய்ப்பு தொடர்பாக மறைத்து வைக்கப்பட்டிருந்த ஏராளமான ஆவணங்கள் கைப்பற்றப்பட்டுள்ளதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
ஜெகத்ரட்சகனுக்கு தொடர்புடைய அலுவலங்களில் முக்கிய பொறுப்பு வசித்து வரும் பணியாளர்களின் வீடுகளிலும் சோதனை நடைபெற்றது. நிதிமேலாண்மையில் தொடர்புடைய பணியாளர்களிடமும் தொடர்ந்து அதிகாரிகள் விசாரணை நடத்தினர்.
ஜெகத்ரட்சகனின் வீடு, அலுவலகம் கல்வி நிறுவனங்கள் உள்ளிட்ட அவருக்கு சொந்தமான 40 இடங்களில் கடந்த 2 நாட்களாக வருமானவரித்துறையினர் நடத்தி வந்த சோதனை முடிவுக்கு வந்துள்ளது. இந்த சோதனையில் அவரது சொத்து மற்றும் பணப்பரிவர்த்தனை தொடர்பான முக்கிய ஆவணங்கள் கைப்பற்றப்பட்டதாக தகவல் வெளியாகியுள்ளது.
இதுவரை கணக்கில் வராத 15 கோடி ரொக்கம் பறிமுதல் செய்துள்ளதாகவும், சுமார் 300 கோடி ரூபாய் வரை வரி ஏய்ப்பு செய்யப்பட்டுள்ளது கண்டுபிடிக்கப்பட்டிருப்பதாகவும் வருமான வரித்துறை அதிகாரிகள் தகவல் வெளியிட்டுள்ளனர். இதனைத் தவிர்த்து ஜெகத்ரட்சகனிடம் வருமான வரித்துறையினர் சுமார் 5 மணி நேரம் விசாரணை நடத்தியுள்ளனர்.