கட்சிப் பணிக்காகவே ராஜினாமா செய்தேன்: ஜெயந்தி நடராஜன் விளக்கம்
சென்னை: லோக்சபா தேர்தலை முன்னிட்டு கட்சிப் பணியாற்றவே தாம் மத்திய அமைச்சர் பதவியை ராஜினாமா செய்திருப்பதாக ஜெயந்தி நடராஜன் தெரிவித்துள்ளார்.
சுற்றுச்சூழல் மற்றும் வனத்துறை அமைச்சர் பதவியை ஜெயந்தி நடராஜன் திடீரென ராஜினாமா செய்தார். அவரை கட்சிப் பணியாற்ற காங்கிரஸ் கட்டளை இட்டிருப்பதாக கூறப்பட்டாலும் பல திட்டங்களுக்கு சுற்றுச் சூழல் அனுமதி அளிக்காமல் காலம் தாழ்த்தினார் என்ற அதிருப்தியும் காரணம் எனக் கூறப்பட்டது.
இந்நிலையில் தமது ராஜினாமா குறித்து ஜெயந்தி நடராஜன் கூறுகையில், லோக்சபா தேர்தலுக்கு கட்சியை பலப்படுத்த வேண்டும். எனவே கட்சிப் பணிக்கு திரும்புவதற்காக என்னை அமைச்சரவையில் இருந்து விடுவிக்குமாறு கோரி பிரதமர், மன்மோகன் சிங்குக்கு கடிதம் எழுதி இருந்தேன்.
என் கோரிக்கையை, பிரதமர் ஏற்றுக் கொண்டார். அதன் அடிப்படையில் தான், இந்த ராஜினாமா நிகழ்ந்துள்ளது; வேறு எந்த விவகாரமும் இல்லை.
சுற்றுச்சூழல் அனுமதி சான்றிதழ் அளிப்பது குறித்தெல்லாம், மத்திய அமைச்சரவை கூடி அங்கு எடுக்கப்படும் முடிவை அடிப்படையாகக் கொண்டே, நடவடிக்கைகள் இருந்து வந்தன.
ஆகவே, என் ராஜினாமா என்பது முழுக்க முழுக்க என் வேண்டுகோளின் அடிப்படையில் தான் அமைந்தது என்றார். தற்போது காங்கிரஸ் தலைவர் சோனியா காந்திய நேரில் சந்தித்து பேச நேரம் கேட்டு காத்திருக்கிறாராம் ஜெயந்தி நடராஜன்.












Click it and Unblock the Notifications