ரஜினிகாந்துக்கு முதல்வராகும் ஆசை இருக்கிறது...நண்பர் ராஜ்பகதூர்
ரஜினிகாந்தின் அரசியல் பேச்சால் பிரமித்து போய்விட்டேன்; ரஜினிகாந்துக்கு முதல்வராகும் ஆசை உள்ளது என்று அவரது நண்பர் ராஜ்பகதூர் தெரிவித்தார்.
சென்னை: ரஜினி அரசியல்வாதியாகவே ஆகிவிட்டார். அவரது அரசியல் பேச்சை கேட்டு நான் பிரமித்து போய்விட்டேன் என்று அவரது நண்பர் ராஜ்பகதூர் தெரிவித்தார்.
நடிகர் ரஜினி காந்தின் அரசியல் பிரவேசம் குறித்து படித்தவர்கள் முதல் பாமரர்கள் வரை பேசி கொண்டிருக்கின்றனர். ஊரெல்லாம் இதே பேச்சுதான். குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை அனைவராலும் விரும்பப்படும் ரஜினி அரசியலுக்கு வந்தால் மக்கள் ஏற்றுக் கொள்வரா? என்பதுதான் இப்போதைக்கு கேள்வியாக உள்ளது.
தமிழகத்தில் 44 ஆண்டுகளாக உள்ளதாக கூறிக் கொள்ளும் அவர் தமிழக மக்களுக்கு என்ன செய்தார். காவிரி விவகாரத்தில் குரல் கொடுத்தாரா, விவசாயிகள் பிரச்சினைகளுக்கு வாய்ஸ் கொடுத்தாரா, இல்லை மதுவிலக்கு பிரச்சினைகாவது வாய்ஸ் கொடுத்தாரா என்று ஆங்காங்கே அரசியல் கட்சிகள் ரஜினியை வறுத்து வாயில் போட்டு மென்று கொண்டிருக்கின்றனர்.
அரசியல் பேச்சு
ரஜினியின் அரசியல் பிரவேசம் குறித்து அவரது நண்பர் ராஜ்பகதூர் சன் நியூஸ் தொலைகாட்சிக்கு பிரத்யேக பேட்டி அளித்தார். அதில் அவர் கூறுகையில், ரஜினிதாந்த் அரசியல்வாதியாகிவிட்டார். அவரது அரசியல் பேச்சை கேட்டு பிரமித்து போய்விட்டேன்.
ஊழலுக்கு குட்பை
ரஜினி அரசியலுக்கு வந்தால் அவர் தன் பக்கத்தில் ஊழல்வாதிகளை வைத்துக் கொள்ளமாட்டார். இதை ரசிகர்களுடனான சந்திப்பு விழாவிலேயே கூறிவிட்டார். மேலும் லஞ்ச லாவண்யத்துக்கு இடமளிக்க மாட்டார். ரஜினியை அரசியலுக்கு வர மக்கள் அழைக்கின்றனர்.
நான் ஒதுங்கியே இருப்பேன்
ரஜினி அரசியல் கட்சி தொடங்கினாலும் இப்போது உள்ளதை போல் அதிலிருந்து ஒதுங்கியே இருப்பேன். எம்எல்ஏ-வாக போட்டியிட வேண்டும் என்ற ஆசை எல்லாம் எனக்கு இல்லை. அவர் முதல்வராகி அவருக்கு சோறு போட்ட,உப்பிட்ட மக்களை மறக்காமல் நல்லது செய்தாலே போதும்.
பெங்களூருக்கு வரமாட்டார்
தற்போது மனநிம்மதிக்காக இமயமலைக்கு அடிக்கடி சென்று வருகிறார். அரசியலுக்கு வந்துவிட்டால் பெங்களூருக்கும் வரமாட்டார், இமயமலைக்கும் செல்ல மாட்டார். ரஜினிக்கு முதல்வராகி மக்களுக்கு சேவை செய்ய வேண்டும் என்ற ஆசை உள்ளது என்றார்.