மன அழுத்தம் 100 சதவீதம்..10 சதவீதம் மட்டுமே வெளிப்படுத்தி உள்ளேன்.. செக் வைக்கும் ஓபிஎஸ்!
சென்னை: கடந்த 2 மாதத்தை வேதனையுடனே கழித்தேன். தொடர்ந்து மன அழுத்தம் இருந்து கொண்டே இருந்தது. அதில் 10 சதவீதத்தை மட்டும் தான் தற்போது கூறியிருக்கிறேன் என்று முதல்வர் ஓ.பன்னீர் செல்வம் கூறியுள்ளார்.
சென்னை மெரீனா கடற்கரையில் உள்ள ஜெயலலிதா சமாதியில் தியானம் செய்து விட்டு பின்னர் பேட்டி கொடுத்து தமிழகத்தையே புரட்டிப் போட்டு விட்டார் ஓ.பன்னீர் செல்வம். அதைத் தொடர்ந்து அவரிடமிருந்து பொருளாளர் பதவியைப் பறித்தார் சசிகலா.
இதன்பின்னர் தனியார் தொலைக்காட்சிக்கு ஓ.பன்னீர் செல்வம் அளித்த பேட்டியில், பாஜகவுடன் எந்த வகையிலும் நான் தொடர்பில் இல்லை. ஜல்லிக்கட்டுக்காக மட்டும் தான் பிரதமரை சந்தித்து பேசினேன். தனிப்பட்ட முறையில் என் மீது குற்றம் சாட்ட முடியவில்லை.அதனால் பாஜகவுடன் என்னை இணைத்து குற்றம்சாட்டுகிறார்கள்.
எனது விசுவாசம் பற்றி மறைந்த முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவுக்கு நன்கு தெரியும். சாதாரண தொண்டர்களை கூட உயர்த்தியவர் ஜெயலலிதா. சோதனை காலத்தில் என்னை முதல்வர் ஆக்கியவர் ஜெயலலிதா. அதிமுகவுக்கும், ஜெயலலிதாவுக்கும் விசுவாசியாகவே இருந்துள்ளேன். எனக்கு கிடைத்த நல்ல பெயரை அதிகார வர்க்கத்தில் இருப்பவர்களால் ஏற்றுக்கொள்ள முடியவில்லை. அதனால் முதலமைச்சராக இருந்த போதும் சக அமைச்சர்களே என்னை அவமானப்படுத்தினார்கள்.
மன அழுத்தம் என்னிடம் தொடர்ந்து இருந்து கொண்டே இருந்தது. அதனால் தான் பரிகாரம் தேடுவதற்காக ஜெயலலிதாவின் நினைவிடம் சென்றேன். அதன்பின்னர் பேட்டி கொடுக்க வேண்டிய கட்டாய சூழலுக்கு ஆளாக்கப்பட்டேன். மன நெருக்கடி 100 சதவீதம் இருந்தது. அதில் 10 சதவீதம் தான் கூறியிருக்கிறேன் என்றார் ஓ.பன்னீர்செல்வம்.