ஜிஎஸ்டி வரியை குறைக்காவிட்டால் சினிமாவை விட்டே விலகுவேன்.. கமல் திடீர் அறிவிப்பு !
சென்னை: மத்திய அரசின் 28 சதவீத ஜிஎஸ்டி வரி விதிப்பால் திரைப்படத்துறை பெரிதும் பாதிக்கப்படும் என்றும் வரியை குறைக்காவிட்டால் சினிமாவை விட்டு விலகுவேன் என்றும் நடிகர் கமல்ஹாசன் கூறியுள்ளார்.
நாடு முழுவதும் ஒரே மாதிரி வரி விதிப்பான ஜிஎஸ்டி ஜூலை 1ம் தேதி முதல் அமலுக்கு வர உள்ளது. சினிமாவிற்கு 28 சதவீத வரி விதிக்க முடிவு செய்யப்பட்டுள்ளது.

எந்த மொழி திரைப்படமாக இருந்தாலும், என்ன தலைப்பாக இருந்தாலும், ஒரே மாதிரி 28 சதவீதம் வரி விதிக்கப்படும் என்று கூறப்பட்டுள்ளது. இதற்கு தமிழ் திரைப்படத்துறையினர் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர்.
இந்த நிலையில் தென்னிந்திய திரைப்பட வர்த்தக சபையில் செய்தியாளர்களிடம் பேசிய நடிகர் கமல்ஹாசன், சூதாட்டமும், சினிமாவும் ஒன்றல்ல வேறு வேறு. திரைப்படம் ஒரு கலை என்று கூறினார்.
மேலும் பேசிய அவர், திரைத்துறையை நம்பி ஏராளமானோர் உள்ளனர். சினிமாவை சரியாகவும், தவறாகவும் பயன்படுத்திய அரசியல் தலைவர்கள் உள்ளனர். ஜிஎஸ்டி வரியோடு நாங்கள் வருமான வரியும் கட்டவேண்டும். நாடு முழுவதும் வெளியாகும் இந்திப் படங்களுக்கு இந்த வரியை விதிக்கலாம். ஆனால் பிராந்திய மொழிப் படங்களுக்குப் பொருந்தாது. தேவையுமில்லை.
எனவே, சினிமா டிக்கெட்டுக்கு 28 சதவீதம் ஜி.எஸ்.டி. வரி விதிக்கும் முடிவை கைவிடுவது பற்றி மத்திய அரசு பரிசீலிக்க வேண்டும். டிக்கெட் மீதான ஜி.எஸ்டி வரியை 12 சதவீதமாக குறைக்க நிதி அமைச்சர் நடவடிக்கை எடுக்க வேண்டும். வரியை குறைக்காவிட்டால் நான் சினிமாவை விட்டு விலகுவேன் என்றார் கமல்ஹாசன்.












Click it and Unblock the Notifications