சினிமாவில் மட்டுமே நடிப்பேன்… மக்கள்தான் எனக்கு முதலாளிகள் : சொல்கிறார் விஜயகாந்த்
தருமபுரி: நான் சினிமாவில் மட்டுமே நடிக்கப் பழக்கப்பட்டவன். மக்கள் முன் நடிக்க மாட்டேன். மக்கள்தான் எனது முதலாளிகள் தேமுதிக தலைவர் விஜயகாந்த் கூறியுள்ளார்.
தருமபுரியில் ஞாயிற்றுக்கிழமையன்று தி.மு.க. முன்னாள் அமைச்சர் வ.முல்லைவேந்தன் தனது ஆதரவாளர்களுடன் தே.மு.தி.க.வில் இணையும் விழாவும், பொதுக்கூட்டமும் நடைபெற்றது.
இந்தக் கூட்டத்தில், பேசிய விஜயகாந்த், தருமபுரியில் தொழில் வளம் இல்லாததால், பெங்களூரு உள்ளிட்ட இடங்களுக்கு ஏராளமானோர் வேலை தேடி குடிபெயர்கின்றனர். அதேபோல, ஒகேனக்கல்
குடிநீர் சுத்தமாக வழங்க வேண்டும் என கோரிக்கை வைக்கின்றனர். இதே தருமபுரியில் ஒகேனக்கல் குடிநீர் திட்டத்தை நிறைவேற்ற வலியுறுத்தி, எனது தலைமையில் ஆர்ப்பாட்டம் நடந்துள்ளது. இதை மக்கள் மறந்திருக்க மாட்டார்கள்.
தே.மு.தி.க. ஆட்சியில் தமிழகத்திலுள்ள அனைத்து மாவட்ட மக்களுக்கும் நல்ல திட்டங்களைச் செயல்படுத்துவோம். அப்போது, தருமபுரி மாவட்ட மக்களின் பிரச்னைகளை நிச்சயம் தீர்ப்போம். தி.மு.க. தலைவர் கருணாநிதியை அவரது வயது முதிர்வின் காரணமாக விமர்சனம் செய்வதைத் தவிர்க்கிறேன்.
நான் திரைப்படத்தில் மட்டுமே நடிக்கப் பழக்கப்பட்டவன். மக்கள் முன் நடிக்க மாட்டேன். மக்கள்தான் எனது முதலாளிகள். மக்களுக்காக மக்கள் பணி கூட்டங்களில் பேசிவந்த என்மீது வழக்குத்தொடுத்தனர். வழக்கைக் கண்டு நான் அஞ்சுவதில்லை.
நான் ஜாதி, மத பேதமற்றவன். அது எங்களது கட்சியிலும் இல்லை. எனவே, அந்த பேதங்களை அனைவரும் தவிர்க்க வேண்டும். தாய், தந்தையரை வணங்க வேண்டும். எங்களது கட்சியில் இணைந்துள்ள அனைவரையும் உரிய முறையில் மதிப்பளித்து நடத்துவோம் என்றார்.
இதைத் தொடர்ந்து, முல்லைவேந்தன், அவரது ஆதரவாளர்களுக்கு தே.மு.தி.க. உறுப்பினர் அட்டை அளித்து, கட்சியில் இணைத்துக் கொள்ளப்பட்டனர். இதில், தே.மு.தி.க. சட்டப் பேரவைக் கொறடா வி.சி.சந்திரகுமார், சட்டப் பேரவை உறுப்பினர்கள் வெங்கடேசன், அ.பாஸ்கர், மாவட்டச் செயலர் இளங்கோவன் உள்ளிட்ட ஏராளமானோர் கலந்து கொண்டனர்.