பாஜகவில் சேரப்போவதாக கூறுவது பொய்.. என் தலைவர் கருணாநிதி தான்: மு.க.அழகிரி
மதுரை: தான் பாஜகவில் சேரப் போவதாக வெளியான தகவலை மறுத்துள்ளார் மு.க.அழகிரி. மேலும், தன்னுடைய தலைவர் கருணாநிதி தான் என அவர் தெரிவித்துள்ளார்.
திமுகவில் இருந்து நீக்கப்பட்ட மு.க.அழகிரி பாஜகவில் இணைய இருப்பதாக செய்திகள் வெளியானது. மதுரையில் வரும் 15-ந் தேதி பா.ஜ.க. தேசியத் தலைவர் அமித்ஷா முன்னிலையில் தமது ஆதரவாளர்களுடன் அவர் பாஜகவில் இணைய திட்டமிட்டிருப்பதாகக் கூறப்பட்டது.
ஏற்கனவே, முன்னாள் மத்திய அமைச்சரும் அழகிரியின் தீவிர ஆதரவாளருமான நெப்போலியன் கடந்த ஆண்டு டிசம்பர் மாதம் திமுகவில் இருந்து பாஜகவில் இணைந்தார். அதே நேரத்தில் அழகிரியின் மற்றொரு ஆதரவாளரான திமுக முன்னாள் எம்.பி ஜே.கே.ரித்தீஷ் அதிமுகவில் இணைந்தார்.
திமுகவில் இருந்து வெளியேறிய இருவரும் அழகிரி ஆசியுடனே வேறு கட்சியில் இணைந்ததாக பேட்டியளித்தனர். இதனால், அழகிரியும் பாஜகவில் இணைய இருப்பதாகக் கூறப்பட்டது.
இந்நிலையில், இந்தத் தகவல்களை அழகிரி மறுத்துள்ளார். இது தொடர்பாக செய்தி நிறுவனம் ஒன்றிற்கு அவர் அளித்துள்ள பேட்டியில் கூறியிருப்பதாவது:-

பொய்யான தகவல்...
நான் பாரதீய ஜனதாவில் சேரப் போவதாக வெளியான தகவல் முற்றிலும் பொய்யானது. என்னுடைய தலைவர் அண்ணா. அவருக்கு பின்னால் கருணாநிதி தான்.

திமுக தான்...
என்னுடைய கட்சி தி.மு.க. தான். நான் கருணாநிதியை தலைவராக ஏற்றுக் கொண்டு இருக்கிறேன்.

நான் ஒன்றும் செய்ய முடியாது...
அவர் என்னை தொண்டனாக ஏற்றுக் கொள்ளவில்லை. அதற்காக நான் ஒன்றும் செய்ய முடியாது.

நல்ல நாள்...
நான் மீண்டும் தி.மு.க.வில் எப்போது இணைவேன் என்பது பற்றி எல்லாம் எதுவும் தெரியாது. அந்த நல்ல நாளுக்காக தொண்டர்கள் காத்திருக்கிறார்கள் என்றால், அந்த நல்லநாள் எப்போது வரும் என்றும் நான் எதுவும் சொல்ல முடியாது' என அவர் தெரிவித்துள்ளார்.












Click it and Unblock the Notifications