30ம் தேதி முடியட்டும், 31ம் தேதி மனம் திறக்கிறேன்... மு.க.அழகிரி போடும் புது குண்டு
மதுரை: 30ம் தேதி எனது பிறந்த நாள் விழா முடியட்டும். 31ம் தேதி எனது மனதைத் திறந்து பேசுகிறேன். அதுவரை நான் என்ன பேசப் போகிறேன் என்பது ரகசியமாகவே இருக்கட்டும் என்று முன்னாள் மத்திய அமைச்சர் மு.க.அழகிரி கூறியுள்ளார்.
அழகிரியின் இந்த புதிய பேச்சு திமுக வட்டாரத்தை சலசலப்பில் ஆழ்த்தியுள்ளது.
பிறந்த நாளின்போது முதலில் தனது மனம் திறந்து பேசப் போவதாக கூறியிருந்தார் அழகிரி. இந்த நிலையில் அடுத்த நாள் தனது மனதைத் திறக்கப் போவதாகவும், ரகசியம் பேசப் போவதாகவும் அவர் கூறியிருப்பது பல்வேறு யூகங்களைக் கிளப்பியுள்ளது.
என்ன பேசுவார் அழகிரி...
அழகிரி என்ன பேசுவார், என்ன சொல்லப் போகிறார் என்ற பெரும் எதிர்பார்ப்பு அழகிரி ஆதரவாளர்களிடம் மட்டுமல்லாமல், திமுகவினர் மத்தியிலும், பிற கட்சியினர் மத்தியிலும் அலையடித்தபடி உள்ளது.
திமுகவுக்கு எதிராக கிளம்புவாரா
ஒரு வேளை திமுகவுக்கு எதிராக அதிரடியான திட்டம் எதையும் அவர் சொல்வாரா என்ற எதிர்பார்ப்பும் உள்ளது.
ஆதரவாளர்களுக்கு உற்சாகம் தரும் முடிவு
திமுக தலைமையால் தாங்கள் தொடர்ந்து பழிவாங்கப்படுவதாக அழகிரி ஆதரவாளர்கள் மத்தியில் ஒரு மனக்குமுறல் நீண்ட காலமாகவே உள்ளது. எனவே அவர்களுக்கு பெரும் உற்சாகம் தரும் வகையிலான முடிவை மட்டுமே தற்போது எடுக்க வேண்டிய நிலையில் அழகிரி உள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.
அதிரடியாக இருக்குமா..
மு.க.அழகிரி பேசப் போவது அல்லது அறிவிக்கப் போவது நிச்சயம் அதிரடியாக இருக்கும் என்று அவரது ஆதரவாளர்கள் மத்தியில் நம்பப்படுகிறது.
மதுரையில் உற்சாகம்
அழகிரி மதுரை திரும்பியிருப்பது அவரது ஆதரவாளர்களிடையே பெரும் உற்சாகத்தை ஏற்படுத்தியிருப்பதாக அங்கிருந்து வரும் தகவல்கள் தெரிவிக்கின்றன.
பிரமாண்ட பிறந்த நாள் விழா
மேலும் இந்த முறை பிறந்த நாள் கொண்டா்ட்டத்திற்கு கட்சித் தலைமையிடமிருந்து எந்தவிதமான கட்டளையும், கட்டுப்பாடும் கிடையாது என்பதால் மிகப் பிரமாண்டமாக கொண்டாடவும் அவரது ஆதரவாளர்கள் தயாராகி வருகிறார்களாம்.
மனம் திறப்பேன்...
நேற்று மதுரைக்கு வந்து சேர்ந்த அழகிரி செய்தியாளர்களிடம் பேசுகையில், 30ம் தேதி என் பிறந்தநாள் விழா முடிவடைந்ததும், 31ம் தேதி என் மனதை திறந்து பேசப்போகிறேன். அதுவரை அந்த ரகசியம் ரகசியமாகவே வைக்கப்படும் என்று தெரிவித்துள்ளார்.
அந்த ரகசியத்தை அறிய அழகிரி ஆதரவாளர்கள் உள்பட அத்தனை பேரும் படபடக்கும் இதயத்துடன் காத்திருப்பது என்னவோ உண்மைதான்....