கோகுல்ராஜ் கொலை வழக்கு... நாளை மறுநாள் சி.பி.சி.ஐ.டி. போலீசில் சரணடைகிறேன்... சொல்வது யுவராஜ்
சென்னை: தலித் இளைஞர் கோகுல்ராஜ் கொலை வழக்கில் தேடப்படும் குற்றவாளியான தீரன் சின்னமலை கவுண்டர் பேரவையின் நிறுவனர் யுவராஜ் நாளை மறுநாள் சேலத்தில் சி.பி.சி.ஐ.டி. போலீசிடம் சரணடைய உள்ளதாக தெரிவித்துள்ளார்.
சேலம் மாவட்டம் ஓமலூரைச் சேர்ந்த தலித் இளைஞர் கோகுல்ராஜ், கவுண்டர் ஜாதி பெண்ணை காதலித்திருக்கிறார். கலப்பு திருமணங்களை கடுமையாக எதிர்த்துக்கும் யுவராஜ் தரப்பு கோகுல்ராஜை கடத்தி சென்று தலையை துண்டித்து படுகொலை செய்துள்ளது என்பது போலீஸ் குற்றச்சாட்டு.

இந்த வழக்கில் யுவராஜ் தப்பி ஓடி தலைமறைவாகிவிட்டார். ஆனால் வாட்ஸ் அப் மூலமாக தொடர்ந்து ஊடகங்களுக்கு தகவல் அனுப்பி வருகிறார். அண்மையில்கூட ஒரு தொலைக்காட்சிக்கும் யுவராஜ் பேட்டி அளித்திருந்தார்.
இதனிடையே இவ்வழக்கை விசாரித்து வந்த தலித் பெண் டி.எஸ்.பி. விஷ்ணுபிரியா திடீரென தற்கொலை செய்து கொண்டார். கோகுல்ராஜ் கொலை வழக்கில் தங்களது விருப்பப்படியே செயல்பட வேண்டும் என்று உயரதிகாரிகள் டார்ச்சர் செய்த காரணத்தாலேயே விஷ்ணுபிரியா தற்கொலை செய்து கொண்டதாக கூறப்படுகிறது.
தற்போது கோகுல்ராஜ் கொலை வழக்கு, விஷ்ணுபிரியா தற்கொலை வழக்கும் இரண்டும் சி.பி.ஐ.சி.டி. போலீசார் விசாரித்து வருகின்றனர். இந்த நிலையில் ஜூனியர் விகடன் வாரம் இருமுறை இதழுக்கு பேட்டியளித்துள்ள யுவராஜ், தம்மை ஒழித்துக் கட்டுவதற்காக தனியரசு எம்.எல்.ஏ.வின் நெருக்கடியால்தான் கோகுல்ராஜ் கொலை வழக்கில் சிக்க வைக்க முயற்சிக்கின்றனர்.
இந்த வழக்கில் உண்மைகளைத் தெரிவிப்பதற்காக நாளை மறுநாள் ஞாயிற்றுக்கிழமையன்று சேலம் சி.பி.சி.ஐ.டி. போலீசார் முன் சரணடைய உள்ளேன் என்று யுவராஜ் கூறியுள்ளார்.
யுவராஜ் சரணடைய உள்ளதால் கோகுல்ராஜ் கொலை வழக்கும் டி.எஸ்.பி. விஷ்ணுபிரியா தற்கொலை வழக்கும் சூடு பிடிக்கத் தொடங்கியுள்ளது.












Click it and Unblock the Notifications