அதிக வாக்கு வித்தியாசத்தில் ஜெயிப்பேன்- நாராயணசாமி நம்பிக்கை
நெல்லித் தோப்பு தொகுதி இடைதேர்தலில் அதிக வாக்கு வித்தியாசத்தில் வெற்றி பெறுவேன் என்று காங்கிரஸ் கட்சி வேட்பாளரும் புதுச்சேரி முதல்வருமான நாராயணசாமி கூறியுள்ளார்.
புதுச்சேரி: புதுச்சேரியில் உள்ள நெல்லித்தோப்பு தொகுதியில் இன்று இடைத்தேர்தலுக்கான வாக்குப்பதிவு காலை 7 மணிக்கு தொடங்கி நடைபெற்று வருகிறது. காலை 9 மணி நிலவரப்படி 15 சதவிகித வாக்குகள் பதிவாகியுள்ளன.
நெல்லித்தோப்பு தொகுதி வேட்பாளரும் புதுச்சேரி முதல்வருமான நாராயணசாமி ஒரு வாக்குச்சாவடி மையத்தில் ஆய்வு செய்தார். பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய அவர்,வாக்குப்பதிவு அமைதியாக நடைபெறுவதாகவும், பாதுகாப்பு ஏற்பாடுகள் சிறப்பாக உள்ளதாகவும் கூறினார். மக்கள் ஆர்வத்துடன் வாக்களித்து வருவதாகவும் நாராயணசாமி தெரிவித்தார். அதிக வாக்கு வித்தியாசத்தில் வெற்றி பெறுவேன் என்றும் நாராயணசாமி கூறியுள்ளார்.

நெல்லித்தோப்பு தொகுதியில் காங்கிரஸ் கட்சி சார்பில் முதல்வர் வி.நாராயணசாமி, அதிமுக சார்பில் ஓம்சக்திசேகர், ஐக்கிய ஜனதா தளம் சார்பில் ஆறுமுகம் (எ) சரவணனும், நாம் தமிழர் கட்சி சார்பில் ரவி அண்ணாமலை மற்றும் 4 சுயேச்சைகள் உள்பட 8 பேர் களத்தில் உள்ளனர். அதிமுக, காங்கிரஸ் இடையே கடுமையான போட்டி நிலவுகிறது. 26 வாக்குச்சாவடிகளும் பதற்றம் நிறைந்தவையாக அறிவிக்கப்பட்டுள்ளது. காலை முதலே வாக்குப்பதிவு விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது.












Click it and Unblock the Notifications