எச். ராஜாவுக்கு ஏற்பட்ட கதிதான் தமிழகத்தில் பாஜகவுக்கும் நேரும்... டெல்லியை எச்சரித்த ஐபி ரிப்போர்ட்
சாரணர் இயக்க தேர்தலைப் போல பாஜகவுக்கு பொதுத் தேர்தலிலும் தமிழகத்தில் தோல்வி ஏற்படும் என எச்சரித்துள்ளதாம் ஐபி அறிக்கை;
சென்னை: தமிழ்நாடு சாரணர் இயக்க தேர்தலில் எச். ராஜாவுக்கு ஏற்பட்ட கதிதான் பாஜகவுக்கும் ஏற்படும் என டெல்லி தலைமைக்கு மத்திய உளவுத்துறை எச்சரிக்கை அறிக்கை அனுப்பியுள்ளது.
தமிழ்நாடு சாரணர் இயக்கத் தலைவர் பதவிக்கான தேர்தலில் பா.ஜ.க தேசிய செயலர் எச்.ராசா தோல்வியடைந்தது குறித்து மத்திய உளவுத்துறை தீவிரமாக ஆய்வு செய்துள்ளது. எச். ராஜா தோற்க வேண்டும் என பள்ளிக் கல்வித்துறைக்குப் பொறுப்பானவர்கள் கடுமையாக உழைத்துள்ளனர். இப்படி இருந்தால் வரக் கூடிய தேர்தல்களிலும் பாஜகவுக்கும் இதே அளவிலான தோல்விதான் கிடைக்கும் என டெல்லி தலைமைக்கு அறிக்கை அளிக்கப்பட்டுள்ளதாம்.
மேலும் அந்த அறிக்கையில், மாநிலம் முழுவதுமே பா.ஜ.கவுக்கு எதிரான தோற்றம் உருவாகியுள்ளது. இந்தத் தோல்வி அதைத்தான் காட்டுகிறது எனக் குறிப்பிட்டுள்ளனர்.
ஜெயிக்க வைக்க முடியலையே...
இந்த அறிக்கையை மையமாக வைத்து ஆளும்கட்சியினரிடம் பேசிய பா.ஜ.க தலைவர் ஒருவர், ஆட்சியைக் கையில் வைத்திருக்கிறீர்கள். எங்கள் கட்சியின் முக்கிய நிர்வாகியையே உங்களால் வெற்றி பெற வைக்க முடியவில்லை. நாளைக்கு பொதுத் தேர்தல் வந்தாலும் இப்படித்தான் நடந்து கொள்வீர்களா? நீங்கள் வெற்றி பெற வேண்டும் என்றால் பூத்துகளையே கைப்பற்றுவீர்கள் என பொரிந்து தள்ளியுள்ளனர்.
திட்டமிட்டு தோற்கடிப்பு
இந்தத் தோல்வி குறித்து டெல்லியில் புலம்பிய பா.ஜ.க நிர்வாகி ஒருவர், மணி என்பவர் வெற்றி பெற வேண்டும் என்பதற்காகவே முறைகேடாக தேர்தலை நடத்தியுள்ளனர். இதையறிந்துதான் பாரத சாரணர் இயக்கத்துக்கு புகார்களை அனுப்பினோம். ராஜா வெற்றி பெற்றுவிட்டால், பள்ளிக் கல்வித்துறையின் செயல்பாடுகளை அலசுவார் என்பதால்தான், அவரைத் தோற்கடித்திருக்கிறார்கள். நாம்தான் வெற்றி பெறுவோம் என அனைத்து அரசியல் கட்சிகளும் எதிர்பார்த்திருந்தனர்.
தேர்தலிலும் தோல்விதான்
கடைசி நேரத்தில் காலைவாரிவிட்டார்கள். நாளை நமக்கு செல்வாக்கான பகுதிகளில் இவர்களை நம்பிக் களம் இறங்கினால் இதே தோல்வி நிச்சயம் எனப் பேசியிருக்கிறார்.
அச்சத்தில் ஆட்சியாளர்கள்
தமிழ்நாட்டின் மீது தீவிரமாக பார்வையைச் செலுத்தத் தொடங்கியிருக்கிறார் தேசிய தலைவர் அமித் ஷா. ராஜாவின் கொந்தளிப்பு என்ன மாதிரியான விளைவுகளை ஏற்படுத்தும் எனவும் அச்சத்தில் உள்ளனர் ஆட்சியில் உள்ளவர்கள்.