இடிந்தகரையில் போராட்டம் திடீர் வாபஸ்
ராதாபுரம்: கூடங்குளம் அணு மின் நிலையத்தில் 3. 4வது அணு உலைகளை அமைக்க கூடாது என்று வலியுறுத்தி போராட்ட குழுவினர் நடத்திய உண்ணாவிரத போராட்டம் திடீர் என்று வாபஸ் பெறப்பட்டது.
நெல்லை மாவட்டம் கூடங்குளம் அணு உலைக்கு எதிராக அணு சக்திக்கு எதிரான மக்கள் இயக்கம் சார்பில் 900 நாட்களை தாண்டி இடிந்தகரையில் போராட்டம் நடந்து வருகிறது.
இந்த நிலையில் கூடங்குளம் அணு மின் நிலையத்தில் 3,4வது அணு உலைகள் அமைக்கப்படும் திட்டத்தை கைவிட வேண்டும், அணு மின் நிலையத்துக்கு எதிராக போராட்டம் நடத்தியவர்கள் மீது போடப்பட்ட வழக்குகளை ரத்து செய்ய வேண்டும் என்பது உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி இடிந்தகரையில் ஜனவரி 31ம் தேதி முதல் அணு சக்திக்கு எதிரான மக்கள் இயக்கத்தினர் சார்பில் உதயகுமார் தலைமையில் உண்ணாவிரதம் போராட்டம் நடந்தது.

5வது நாளாக நீடித்த உண்ணாவிரத்தில் அணு சக்திக்கு எதிரான இயக்க ஓருங்கிணைப்பாளர் உதயகுமார், புஷ்பராயன், ஜெயக்குமார், நன்மாறன், முகிலன், ராஜலிங்கம், ஜெபஸ்தியன் மற்றும் பலர் பங்கேற்றனர்.
போராட்டத்திற்கு ஆதரவு தெரிவித்து இடிந்தகரை, கூடங்குளம், கூத்தகுழி உள்ளிட்ட கடலோர மீனவர்களும் வேலை நிறுத்தத்தில் ஈடுபட்டனர். இந்நிலையில் உண்ணாவிரத்தில் ஈடுபட்டிருந்த உதயகுமார் உள்ளிட்டவர்கள் மிகவும் சோர்வாக இருந்தனர். அவர்களின் நிலையை கருத்தில் கொண்டு இரவு உண்ணாவிரத போராட்டம் வாபஸ் பெறப்பட்டது.

இதுகுறித்து உதயகுமார் கூறுகையில், உண்ணாவிரதம் இருந்தவர்கள் உடல் நிலையை கருத்தில் கொண்டும், நாடாளுமன்ற தேர்தலில் அணு உலை எதிர்ப்பு இயக்கம் எவ்வாறு செயல்படுவது என்பது குறித்தும் ஆலோசனை நடத்த இருப்பதால் உண்ணாவிரதம் வாபஸ் பெறப்பட்டுள்ளது என்றார் அவர்.












Click it and Unblock the Notifications