சிலை கடத்தல் மன்னன் தீனதயாளன் பாஸ்போர்ட் முடக்கம் - இன்றும் 6 சிலைகள் கண்டெடுப்பு
சென்னை: சென்னை ஆழ்வார்பேட்டையில் உள்ள தீனதயாளன் வீட்டில் ஏராளமான சிலைகளை சிலை கடத்தல் தடுப்பு பிரிவு போலீசார் பறிமுதல் செய்தனர். இதையடுத்து சிலை கடத்தல் வழக்கில் தலைமறைவாகியுள்ள தீனதயாளன் வெளிநாடுகளுக்கு தப்பி செல்வதை தடுக்க அவரது பாஸ்போர்ட் முடக்கப்பட்டுள்ளது. தீனதயாளன் வீட்டில் 3 வது நாளாக இன்று நடைபெற்ற சோதனையில் மேலும் 6 சிலைகள் கண்டெடுக்கப்பட்டுள்ளன.
தமிழக கோயில்களில் ஆயிரம் ஆண்டுகளுக்கு மேல் பழமையான ஏராளமான சிலைகள் உள்ளன. இந்தச் சிலைகளை வெளிநாட்டு அருங்காட்சியகங்கள் கோடிக்கணக்கான ரூபாய் கொடுத்து வாங்குகின்றன. இதைப் பயன்படுத்திக்கொண்டு பணம் சம்பாதிக்கும் முயற்சியில் சிலர் சிலைகளைத் திருடி விற்று வருகிறார்கள்.

இந்நிலையில் சென்னை ஆழ்வார்பேட்டை முரேஸ்கேட் சாலையில் உள்ள ஒரு பங்களாவில் ஏராளமான சாமி சிலைகள் பதுக்கி வைக்கப்பட்டுள்ளதாக சிலை கடத்தல் தடுப்பு பிரிவுக்கு தகவல் கிடைத்தது.
இதனைத் தொடர்ந்து சிலை கடத்தல் தடுப்பு பிரிவு ஐ.ஜி. பொன்மாணிக்கவேல், டி.எஸ்.பி. சுந்தரம், ஆய்வாளர்கள் ரவி, ஜனார்த்தனம் மற்றும் போலீஸார் நேற்று காலையில் அந்த பங்களாவுக்குள் நுழைந்து சோதனை நடத்தினர்.
வெளியே கற்சிலைகள் செய்யும் கூடம்போல் காட்சியளித்த இந்த வீட்டில் நடந்த சோதனையின்போது 54 பழங்கால சாமி சிலைகள் கைப்பற்றப்பட்டன. இது தொடர்பாக 3 பேர் கைது செய்யப்பட்டனர். கைது செய்யப்பட்ட மான்சிங், 58, குமார்,58, ராஜாமணி,60 ஆகியோர் சிலைகளை வெளிநாடுகளுக்கு கடத்தி செல்லும் ஏஜெண்டுகள் என்பது விசாரணையில் தெரியவந்தது.
இந்தக் கும்பலுக்கு தலைவராகச் செயல்பட்ட ஆந்திர மாநிலத்தைச் சேர்ந்த தீனதயாளன், 78 தலைமறைவாகியுள்ளார். அவர் நேரில் ஆஜராகக் கோரி போலீஸார் புதன்கிழமை சம்மன் அனுப்பியுள்ளனர். 2ம் தேதிக்குள் ஆஜராகவேண்டும் என்று நோட்டீஸ் ஒட்டினர். ஆனால் தீனதயாளன் ஆஜராகவில்லை.
கடந்த சில ஆண்டுகளுக்கு முன்னர் பஞ்சாப் மாநிலத்தை சேர்ந்த சுபாஷ் கபூர் என்ற சிலை கடத்தல் கும்பல் தலைவனை ஜெர்மன் போலீசார் கைது செய்தனர். தமிழக போலீசார் அவரை அழைத்து வந்து கைது செய்து புழல் சிறையில் அடைத்துள்ளனர். சுபாஷ் கபூரும், தீனதயாளும் நெருங்கிய கூட்டாளிகள் என்பதால் இது தொடர்பாக சுபாஷ் கபூரிடம் விசாரணை நடத்த போலீசார் முடிவு செய்துள்ளனர்.
இதனிடையே தீனதயாளன் வீட்டில் பூட்டப்பட்டிருந்த அறைகளை உடைத்து நேற்றும் இன்றும் சோதனைகள் நடத்தப்பட்டது. அப்போது நூற்றுக்கணக்கான சிலைகள் கண்டுபிடிக்கப்பட்டன. 3வது நாளாக இன்று நடத்திய சோதனையில் மேலும் 6 சிலைகள் கண்டெடுக்கப்பட்டன. 6 சிலைகளில் 3 சிலைகள் யானை தந்தத்தால் செய்யப்பட்டவை என தகவல்கள் தெரிவித்துள்ளனர்.
இந்த சோதனை குறித்து செய்தியாளர்களிடம் பேசிய ஐ.ஜி.பொன் மாணிக்கவேல், சிலை கடத்தல் கும்பல் தலைவன் தீனதயாளன் பங்களா வீட்டில் 2 அறைகள் பூட்டப்பட்டு இருந்தன. இதனால் அந்த அறைகளில் சோதனை நடத்த எழும்பூர் நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்து, நீதிமன்ற உத்தரவின்பேரில் நேற்றும், இன்று காலையிலும் சோதனை நடத்தப்பட்டது.
இதில், 'வெண்கலத்தில் செய்யப்பட்ட 34 சாமி சிலைகள், சுமார் ஆயிரம் ஆண்டுகள் பழமை யான 42 ஓவியங்கள் கண்டுபிடிக்கப்பட்டன. ஓவியங்கள் கற்களில் வரையப்பட்டுள்ளன. அவை அனைத்தும் பறிமுதல் செய்யப்பட்டுள்ளன.
இன்று நடைபெற்ற சோதனையில் மேலும் 6 சிலைகள் சிக்கியுள்ளன என்று சிலை கடத்தல் தடுப்பு பிரிவு ஐ.ஜி.பொன் மாணிக்கவேல் கூறியுள்ளார்.
தீனதயாளனை பிடிப்பதற்காக தமிழகம் முழுவதும் போலீசார் உஷார்படுத்தப்பட்டுள்ளனர். அவருக்கு உதவும் முகவர்களையும் தீவிரமாக கண்காணித்து வருகிறோம். எனவே அவர் சிக்குவார் என்று டிஎஸ்பி சுந்தரம் கூறியுள்ளார்.
பாஸ்போர்ட் முடக்கம்
இதனிடையே சிலை கடத்தல் வழக்கில் தலைமறைவாகியுள்ள தீனதயாளன் பாஸ்போர்ட் முடக்கப்பட்டுள்ளது. இந்தியாவில் உள்ள 5 வங்கிக்கணக்குகளும், ஹாலாந்தில் உள்ள டச்சு வங்கிக்கணக்கும் முடக்கப்பட்டுள்ளதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.












Click it and Unblock the Notifications