பா.ஜ.க அணியில் தே.மு.தி.க. இணைந்தால் மகிழ்ச்சி: பொன். ராதாகிருஷ்ணன்
சென்னை: நாடாளுமன்றத் தேர்தலில் பாஜக அணியில் தேமுதிக இணைந்தால் மகிழ்ச்சி அடைவோம் என்று மாநிலத் தலைவர் பொன். ராதாகிருஷ்ணன் கூறியுள்ளார்.
சென்னையில் உள்ள பாரதீய ஜனதா தலைமை அலுவலகமான கமலாலயத்தில் ஏராளமானோர் பாஜகவில் இணையும் நிகழ்ச்சி நடந்தது. இதில் மாநில தலைவர் பொன். ராதா கிருஷ்ணன் முன்னிலையில் கம்ப்யூட்டர் என்ஜினீயர்கள் 300 பேர் ஹரிகரன், அனிதா, மகேஸ்வரி, கவுரி ஆகியோர் தலைமையில் இணைந்தனர்.

நாகப்பட்டினத்தை சேர்ந்த ஜெயபால் தலைமையில் 200 பேரும், கோவையை சேர்ந்த மாரிமுத்து தலைமையில் 100 பேரும் இணைந்தனர்.
இதனைத் தொடர்ந்து செய்தியாளர்களிடம் பேசிய பொன்.ராதாகிருஷ்ணன் கூறியதாவது:
பாரதீய ஜனதா கட்சி தமிழ் மக்கள் உணர்வுகளில் கலந்து வருகிறது. எனவே தான் ஏராளமானோர் கட்சியில் இணைகிறார்கள். பாராளுமன்ற தேர்தல் பணிகளை தொடங்கி விட்டோம்.
கடந்த 1-ந் தேதி முதல் ‘வீடு தோறும் மோடி' 'உள்ளம் தோறும் தாமரை' என்ற பிரசார யாத்திரையை கிராமங்களில் நடத்தி வருகிறோம். கடந்த 22-ந் தேதியுடன் முடிவதாக இருந்த இந்த யாத்திரை வருகிற ஜனவரி 12-ந் தேதி வரை நீட்டிக்கப்பட்டுள்ளது.
ஜனவரி 3-ந் தேதி கட்சியின் நகர, ஒன்றிய பொறுப்பாளர்களுக்கான பயிற்சி முகாம் திருச்சியில் நடைபெறுகிறது. ஜனவரி 31-ந் தேதி மீனவர்கள் பிரச்சினையை மையப்படுத்தி கடல் தாமரை போராட்டம் நடைபெறும்.
அதில், சுஷ்மா சுவராஜ் கலந்து கொள்கிறார். மகளிர் அணி சார்பில் மது ஒழிப்பை வலியுறுத்தி ‘தாலி காக்கும் போராட்டம்' நடத்தப்படும்.
இவ்வாறு அவர் கூறினார்.
இதனைத் தொடர்ந்து செய்தியாளர்கள் நாடாளுமன்றத் தேர்தலைப் பற்றி கேள்வி எழுப்பினர். அதற்கு அவர் அளித்த பதில்கள் பின்வருமாறு.
கே: பாஜக கூட்டணியில் தே.மு.தி.க. இணைவதற்கான பேச்சு வார்த்தைகள் நடைபெறுகிறதா?
ப: பாஜக கூட்டணியில் தே.மு.தி.க. சேர்ந்தால் மகிழ்ச்சி அடைவோம்.
கே: நரேந்திரமோடி மீண்டும் எப்போது தமிழகம் வருகிறார்?
ப: பிப்ரவரி மாதம் வர வாய்ப்பு உள்ளது.
கே: டெல்லி முதல்வர் கேஜ்ரிவால் பதவி ஏற்றுள்ளது பற்றி உங்கள் கருத்து என்ன?
ப: அவருக்கு எங்கள் பாராட்டுக்கள். தொடர்ந்து பாராட்டு பெறும் வகையில் அவர் நடந்து கொள்ள வேண்டும். இவ்வாறு அவர் கூறினார்












Click it and Unblock the Notifications