நீதி விசாரணைக்கு நான் ரெடி.. அமைச்சர் விஜயபாஸ்கருக்கு ஓ.பன்னீர்செல்வம் சவால்!
ஜெயலலிதா மரணம் தொடர்பாக நீதி விசாரணை அமைத்தால் ஓ.பன்னீர் செல்வம்தான் முதல் குற்றவாளி என்று அமைச்சர் விஜயபாஸ்கர் கூறியுள்ளதற்கு, தானும் நீதி விசாரணையை தானே கோருகிறேன், அவ்வாறு நடந்தால் யார் முதல் குற்றவாளி என்பது தெரியும் என்று முன்னாள் முதல்வர் ஓ.பன்னீர் செல்வம் தெரிவித்தார்.
ஜெயலலிதாவின் மரணத்தில் மர்மம் இருப்பதால் நீதி விசாரணை அமைக்க வேண்டும் என்று ஜனாதிபதியிடம் மனு அளித்த ஓ.பன்னீர் செல்வம் அணியினர் இன்று தமிழகம் முழுவதும் உண்ணாவிரதப் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

அப்போது ஓ.பன்னீர் செல்வம் பேசுகையில், ஜெயலலிதா அப்பல்லோ மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்த போது மருத்துவமனையில் உள்ள பெரும்பாலான இடங்களில் சுகாதாரத் துறை அமைச்சர் விஜயபாஸ்கர் அடியாள்களை நிற்க வைத்திருந்தார்.
அவர்களது பணியே நாள்தோறும் முக்கிய அதிமுக நிர்வாகிகள் யார் யார் மருத்துவமனைக்கு வருகின்றனர், யார் யாரிடம் பேசுகின்றனர் ,எங்கே செல்கின்றனர் போன்ற தகவல்களை குறித்து கொண்டு விஜயபாஸ்கரிடம் அளிப்பர்.
ஜெயலலிதா மரணம் குறித்து நீதி விசாரணை அமைத்தால் ஓ.பன்னீர் செல்வம்தான் முதல் குற்றவாளி என்று விஜயபாஸ்கர் தெரிவித்துள்ளார். ஏம்பா நானும் நீதிவிசாரணையைத்தானே கேட்கிறேன், அதற்காகத்தானே தர்மயுத்தம். நீதி விசாரணை நடத்தினால் முதல் குற்றவாளியாக அமைச்சர் விஜயபாஸ்கர் இடம்பெறுவார் என்பதில் சந்தேகம் இல்லை என்றார் அவர்.












Click it and Unblock the Notifications