மோடி நினைத்திருந்தால் ஜெ.வைக் காப்பாற்றியிருக்கலாம்.. செம்மலை கிளப்பும் பரபரப்பு
மறைந்த முதல்வர் ஜெயலலிதா அப்பல்லோ மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்தபோது பிரதமர் மோடி வந்து ஜெயலலிதாவைப் பார்த்திருந்தால் அவரை வெளிநாட்டுக்கு அழைத்துச் செல்ல வழிவகை செய்திருப்பார்.
சேலம்: அப்பல்லோ மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்த ஜெயலலிதாவை மோடி வந்து பார்த்திருந்தால் அவர் கட்டாயம் பிழைத்திருப்பார் என சேலத்தில் நடக்கும் உண்ணாவிரதப் போராட்டத்தில் செம்மலை கூறினார்.
ஜெயலலிதாவின் மர்ம மரணத்துக்கு நீதி விசாரணை கோரி, ஓ.பன்னீர் செல்வம் மற்றும் அவரது ஆதரவாளர்கள் தமிழகம் முழுவதும் உண்ணாவிரதப் போராட்டம் நடத்தி வருகின்றனர். சேலத்தில் மேட்டூர் எம்.எல்.ஏ. செம்மலை தலைமையில் போராட்டம் நடைபெற்றது.

அப்போது பேசிய செம்மலை,'' 1966ல் அண்ணா புற்றுநோயால் பாதிக்கப்பட்டு மருத்துவமனையில் இருந்தபோது, அவரை அப்போதையை பிரதமர் இந்திராகாந்தி வந்து பார்த்தார். உடனே அவரை வெளிநாடு சென்று மருத்துவம் பார்க்க வழி செய்தார்.
அதுபோல ஜெயலலிதாவையும் பிரதமர் மோடி வந்து பார்த்திருந்தால், ஜெயலலிதாவை வெளிநாடு கொண்டு சென்றிருப்பார்கள். அவர் உயிர்பிழைத்திருப்பார்'' என செம்மலை கூறினார். எம்ஜிஆருகும் உடல்நிலை பாதிக்கப்பட்டிருந்த போது அமெரிக்கா கொண்டு செல்லப்பட்டார். அங்கு அவருக்கு சிறுநீரக மாற்று அறுவைச் சிகிச்சை நடந்தது குறிப்பிடத்தக்கது.
அண்ணா, எம்ஜிஆரைப் போல் ஜெயலலிதாவையும் வெளிநாட்டுக்கு மருத்துவ சிகிச்சைக்கு அழைத்துச் சென்றிருந்தால் அவர் காப்பாற்றப்பட்டிருக்கலாம் என்று அவரது தொண்டர்களும் பொதுமக்களும் நம்புகின்றனர்.
ஆனால், ஜெயலலிதாவை வெளிநாட்டுக்கு சிகிச்சைக்கு கொண்டு செல்லக் கூடாது என ஒரு 'சக்தி' தடுத்ததாக ஓ.பன்னீர் செல்வம் அணியினர் கூறிவருவது குறிப்பிடத்தக்கது.












Click it and Unblock the Notifications