அது மட்டும் நடந்தால்.. ஆர்.கே.நகர் தேர்தலுக்கு பிறகு அதிமுக சுக்குநூறாகும்.. ஆசையில் அந்த குரூப்
Recommended Video
சென்னை: ஆர்.கே.நகர் சட்டசபை இடைத் தேர்தலில் திமுக வெற்றி பெறும் என்றும், சுயேட்சை வேட்பாளர் டிடிவி தினகரன் 2வது இடத்தை பிடிப்பார் என்றும், ஆளும் கட்சியான அதிமுக 3வது இடத்திற்கு தள்ளப்படும் என்றும் ஒரு கருத்து கணிப்பு தெரிவிக்கிறது.
பண்பாட்டு மக்கள் தொடர்பகம், லயோலா கல்லூரி முன்னாள் மாணவர்கள் நடத்திய கருத்து கணிப்பில் இந்த தகவல் தெரியவந்துள்ளது.
இந்த கருத்து கணிப்புபடியே தேர்தல் முடிவுகள் அமைந்தால் ஓ.பன்னீர்செல்வம் மற்றும் எடப்பாடி அணிகள் மீண்டும் மோதிக்கொள்ளும் என்று வழி மீது விழி வைத்து காத்திருக்கிறது தினகரன் தரப்பு.
திமுகவுக்குதான் முதலிடம்
ஆர்.கே.நகர் இடைத் தேர்தலில் திமுக 33 சதவீத வாக்குகளை பெற்று முதலிடத்தில் உள்ளது. அதேநேரம், ஆளும் கட்சியான அதிமுகவுக்கு, 26 சதவீதம் மட்டுமே வாக்குகள் கிடைக்குமாம். அதிமுகவைவிட டிடிவி தினகரனுக்கு அதிக வாக்குகள் கிடைக்குமாம். 28 சதவீதம் வாக்குகளை தினகரன் பெறுவார் என்கிறது இந்த கருத்து கணிப்பு.
பிடிவாதம்
இப்படித்தான் தேர்தல் முடிவும் வெளியாகும் என்றால், அது அதிமுகவிற்குள் உட்கட்சி பூசலை உருவாக்கும் வாய்ப்புள்ளது. ஆர்.கே.நகரில் அதிமுக சார்பில் ஓபிஎஸ் ஆதரவாளர் மதுசூதனன் களமிறக்கப்பட்டுள்ளார். எடப்பாடி ஆதரவாளர்களில் ஒருவரை களமிறக்க வேண்டும் என்பதே அவர் தரப்பினர் கோரிக்கையாக இருந்தபோதிலும், ஓபிஎஸ் அணியின் பிடிவாதத்தால் மதுசூதனன் வேட்பாளராக்கப்பட்டுள்ளார்.
உள்குத்து
மதுசூதனனுக்கு எதிராக சிலர் உள்குத்து வேலைகளில் ஈடுபடலாம் என்ற சந்தேகம் ஓபிஎஸ் தரப்புக்கும் உள்ளது. இந்த நிலையில்தான் ரிசல்ட் இப்படி வந்தால், அது உள்குத்து வேலைதான் என்ற முடிவுக்கு ஓபிஎஸ் அணியினர் வருவார்கள். இதனால் உள்ளுக்குள் மோதிக்கொள்வார்கள் என எதிர்பார்க்கிறது தினகரன் தரப்பு. ஏனெனில் ஏற்கனவே ஓபிஎஸ் அணியினருக்கு உரிய முக்கியத்துவம் தரப்படவில்லை என்ற ஆதங்கத்தை சீனியர்கள் நேரடியாகவே எழுப்பி போருக்கான சங்கநாதத்தை முழங்கிவிட்டனர்.
அதிமுக எதிர்காலம்
மீண்டும் அணிகள் இணைந்துள்ளன, மனங்கள் இணையவில்லை என்பது போன்ற கோஷங்கள் பன்னீர்செல்வம் அணியில் இருந்து எழும்பும் என்ற எதிர்பார்ப்பில் உள்ளது தினகரன் அணி. அப்படியானால் அதிமுக எதிர்காலத்தை ஆர்.கே.நகர் தேர்தல்தான் தீர்மானிக்கப்போகிறது என்பது மட்டும் உறுதியாகிவிட்டது.