பொருத்தம் பார்த்துக் கொண்டுள்ளோம்.. கூட்டணி குறித்து இல.கணேசன்
சென்னை: திருமணத்திற்கு சம்பந்தம் பேசும்போது என்ன செய்வார்களோ அதேபோலத்தான் கூட்டணிக்கும் கூட ஜாதகப் பொருத்தம் பார்த்துக் கொண்டுள்ளோம் என்று கூறியுள்ளார் மூத்த பாஜக தலைவர் இல.கணேசன்.
இதுகுறித்து அவர் செய்தியாளர்களிடம் பேசுகையில், தமிழகத்தில் உள்ள பா.ஜ.காவின் 6,134 கேந்திரங்களுக்கும், மாநில அளவில் பொறுப்பில் உள்ளவர்கள் நேரடியாக சென்று அடிப்படை உறுப்பினர்களை சந்தித்து, தேர்தல் பணிகளை துவங்கிவிட்டனர்.
மனம் திறந்து மனதில் பட்டதை, பளிச் என சொல்லும் தன்மை, தேமுதிக தலைவர் விஜயகாந்த்துக்கு உண்டு. தன் கருத்தை வெளிப்படையாக சொல்வது போல, பத்திரிகையாளர்களிடம் கருத்தை சொல்லி இருக்கிறார். இது அவருடைய சுபாவம். இந்த ஒரு விஷயத்தை மட்டும் வைத்து விஜயாந்தை எடைபோட கூடாது. விஜயகாந்த் மக்கள் மத்தியில், ஒரு சக்தி வாய்ந்த மதிப்புமிக்க தலைவராக திகழ்கிறார்.
லோக்சபா தேர்தலின் போது ஏற்பட்ட கூட்டணி இன்னும் தொடர்ந்து நீடிக்கிறது. வைகோவைத்தவிர. கூட்டணி கட்சியின் தலைவர்கள், அவர்கள் கூட்டத்தில் பேசும் கருத்தை வைத்தோ அல்லது நிருபர்கள் கேட்ட கேள்விக்கு அளிக்கும் பதிலை வைத்தோ, கூட்டணியின் தன்மை என்ன? என முடிவு எடுக்க கூடாது.
ஒரு கட்சி கூட்டணியில் உள்ள தலைவர்களை எடைபோடுவது முறையல்ல. ஊடகங்கள் மூலமாகவும் பேச்சுவார்த்தை நடத்துவது இயலாது. பாஜக சார்பில் அங்கீகரிக்கப்பட்ட மூவர் குழு, விஜயகாந்தையும், ராமதாசையும் சந்தித்துள்ளனர். பொங்கலுக்கு முன்பாகவே கூட்டணியில் ஒரு தெளிவு பிறக்கும் என நம்புகிறேன். திருமணத்துக்கு சம்பந்தம் வைத்துக்கொள்வது போல, கூட்டணிக்காக ஜாதகப்பொருத்தம் பார்த்து கொண்டிருக்கிறோம் என்றார் அவர்.