கட்சிக்காரர்களுக்கு உதவி செய்யாத பொன்னார்... புகார் தட்டும் இல.கணேசன் ஆதரவாளர்கள்
அமைச்சராக இருந்தாலும் பொன்னார் பாஜகவினருக்கு எந்த நன்மையும் செய்வதில்லை என்று மோடிக்கு தகவல் அனுப்பியுள்ளனராம் இல.கணேசன் தரப்பினர்.
சென்னை: தமிழகத்தில் பா.ஜ.க.விற்கு இருக்கும் ஒரே அமைச்சர் பொன்.ராதாகிருஷ்ணன். சமீபத்தில் தமிழகத்தை சேர்ந்த இல.கணேசனுக்கு ராஜ்யசபா எம்.பி.கிடைத்தது. இந்த நிலையில், இல.கணேசன் ஆதரவாளர்கள், அமைச்சராக இருந்தும் தமிழகத்தில் பொன்னார் கட்சியை வளர்க்க எந்த முயற்சியும் எடுக்கவில்லை. அமைச்சர் பதவியில் இருந்தும் கட்சிக்காரர்களுக்கு எந்த உதவியும் செய்வதில்லை. தொகுதி மக்களுக்கும் நன்மை செய்யவில்லை .
சென்னை துறைமுக கழகத்தில் உள்ள கமிட்டியில் 5 உறுப்பினர்கள் நியமிக்கப்பட்டிருப்பதில் ஒரு இடம் மீனவருக்கு தரப்பட வேண்டும். அதைபற்றி கவலைப்படவில்லை பொன்னார்.
சமீபத்தில், தமிழகம் வந்த பெட்ரோலிய அமைச்சர் தர்மேந்திர பிரதான், ப.ஜ.க.தொண்டர்களுடன் உரையாட வேண்டும் என சொன்னார். அதற்கேற்ப கூட்டம் ஏற்பாடானது. அதில், எத்தனை பேர் கேஸ் ஏஜென்சி வைச்சிருக்கீங்க, எத்தனை பேர் பெட்ரோல் பங்க் வெச்சிருக்கீங்க என்று கேள்வி கேட்டார்.
யாருமே கை தூக்கவில்லை. ஏன்னா, யாருமே தொழிலதிபர்களா இல்லை. இதை பார்த்து நொந்து போன அவர், இப்படி இருந்தா கட்சி எப்படி வளரும்? அமைச்சரும் தமிழக தலைவர்களும் கட்சியினர் பலரையும் பொருளாதார ரீதியாக வளர்ச்சி அடைய வைக்க முயற்சி எடுக்க வலியுறுத்துங்கள் என சொல்லி விட்டுப்போனார்.
இது பொன்னாருக்கும் பாஜக லீடர்களுக்கும் தெரியும். ஆனாலும் கட்சிக்காரர்களுக்கு எந்த நன்மையும் செய்வதில்லை என்கிற ரீதியில் மோடிக்கு தகவல் அனுப்பியுள்ளனராம் இல.கணேசன் தரப்பினர்.