மாந்தோப்பிற்குள் ரகசிய ‘பான், குட்கா தொழிற்சாலை’... பறந்து சென்று சீல் வைத்த அதிகாரிகள்!
தருமபுரி: தருமபுரி அருகே மாந்தோப்பிற்குள் ரகசியமாக செயல்பட்டு வந்த பான், குட்கா தொழிற்சாலையைக் கண்டுபிடித்து, அதற்கு மாவட்ட உணவுப் பாதுகாப்பு ஆய்வாளர்கள் சீல் வைத்துள்ளனர்.
தமிழகத்தில் பான்மசாலா, குட்கா, புகையிலை போன்ற பொருட்கள் விற்பனை செய்ய தடை விதிக்கப்பட்டுள்ளது. ஆனாலும், ஆங்காங்கே ரகசியமாக இந்தப் பொருட்கள் தயாரிக்கப்பட்டு, மாநிலம் முழுவதும் விற்பனை செய்யப்பட்டு வருகின்றன. தமிழகம் மட்டுமல்லாது வெளிமாநிலங்களுக்கும் இந்த பொருட்களை தயாரித்து விற்பனை செய்து வருகின்றனர்.

இது தொடர்பாக அவ்வப்போது சம்பந்தப்பட்ட அதிகாரிகளுக்கு கிடைக்கும் ரகசிய தகவல்கள் அடிப்படையில் இந்த தொழிற்சாலைகள் மூடப்படுகின்றன.
அந்தவகையில், தருமபுரி மாவட்டம் முதலைப்பட்டி கிராமத்தில் மாந்தோப்பில் பான் மற்றும் குட்கா பொருட்கள் தயாரிக்கும் தொழிற்சாலை ரகசியமாக செயல்பட்டு வருவதாக தருமபுரி மாவட்ட ஆட்சியர் விவேகானந்தனுக்கு ரகசிய தகவல் கிடைத்தது.
அதனைத் தொடர்ந்து அந்த கிராமத்தில் ஆய்வு மேற்கொள்ளும்படி மாவட்ட உணவுப் பாதுகாப்பு நியமன அலுவலர் மருத்துவர் பிருந்தாவுக்கு மாவட்ட ஆட்சியர் உத்தரவிட்டார்.
இந்த உத்தரவின் பேரில் மருத்துவர் பிருந்தா, உணவு பாதுகாப்பு ஆய்வாளர்கள் கோபிநாத், நாகராஜ், குமணன் உள்ளிட்டோர் அடங்கிய குழுவினர் முதலைப்பட்டி கிராமத்திற்கு விரைந்து சென்று சோதனை நடத்தினர். அதில், அங்குள்ள மாந்தோப்பு ஒன்றில் பான், குட்கா தயாரிக்கும் ரகசிய ஆலை இயங்கி வந்தது கண்டுபிடிக்கப்பட்டது.
விரைந்து செயல்பட்ட அதிகாரிகள் பான் பொருட்கள் உற்பத்திக்கும், பேக்கிங் பணிக்கும் பயன்படுத்தப்பட்ட இயந்திரங்கள், உபகரணங்கள் ஆகியவற்றை பறிமுதல் செய்து, தொழிற்சாலைக்கு சீல் வைத்தனர். இந்த சோதனையின் போது, அங்கிருந்த சுமார் 60 லட்சம் மதிப்புள்ள பான் பொருட்கள் கைப்பற்றப்பட்டது.
.
தற்போது சீல் வைக்கப்பட்டுள்ள இந்த தொழிற்சாலையானது கடந்த ஒரு மாதமாக இயங்கி வருவதாக முதல்கட்ட விசாரணையில் தெரிய வந்துள்ளதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். ஆனால், இந்த தொழிற்சாலையின் உரிமையாளர் யார் என்ற விபரமும் தெரியவில்லையாம்.
தொடர்ந்து இந்த விவகாரம் தொடர்பாக போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.












Click it and Unblock the Notifications