மதிமுகவில் இருந்து விலகினார் இமயம் ஜெபராஜ்
சென்னை: மதிமுகவின் அடிப்படை உறுப்பினர் உள்ளிட்ட அனைத்து பொறுப்புக்களில் இருந்தும் விலகுவதாக இமயம் டிவி நிறுவனர் ஜெபராஜ் அறிவித்துள்ளார்.
இது தொடர்பாக இன்று அவர் வைகோவிற்கு எழுதியுள்ள கடிதம்:

மதிப்பிற்குரிய மதிமுக பொதுச்செயலாளர் வைகோ அவர்களுக்கு வணக்கம். 2009ம் ஆண்டு முதல் கட்சியில் இணைந்து முழு அர்ப்பணிப்பு உணர்வுடன் என்னால் இயன்ற பணியை செய்திருக்கிறேன்.
என் இனத்தின் மீதும் எனது தாய்மொழியின் மீதும் எனக்குள்ள பற்றின் காரணமாக நான் பிறந்த இந்த இனத்திற்கு ஏதாவது செய்ய வேண்டும் என்ற எண்ணம் எனக்கு எப்போதும் உண்டு.
அதற்கு இந்த இயக்கம் துணை நிற்கும் என்று கருதித்தான் இந்த இயக்கத்தில் இணைந்தேன். ஆனால் அதில் எனக்கு ஏமாற்றமே மிஞ்சியது. ஒரு இயக்கத்தில் இணைந்த பிறகு நம்மால் அந்த இயக்கத்திற்கு எந்த அவப்பெயரும் வந்து விடக்கூடாது என்ற எண்ணத்திலேயே தொடர்ந்தேன்.
ஆனால் தொலைநோக்குப் பார்வையில்லாமல், அவசரகதியில் முடிவுகள் எடுப்பதும், எடுத்த முடிவின்படி தொடர்ந்து செயல்படாமல் அவ்வப்போது தகுந்த காரணங்கள் இன்றி நிலைப்பாட்டை மாற்றிக்கொள்வதும், அதற்கு சொல்லப்படும் காரணங்கள் ஏற்றுக்கொள்ள முடியாதவையாக இருக்கின்றன. இது மக்கள் மத்தியில் அதிருப்தியை ஏற்படுத்தி, இயக்கத்தின் மீதான நம்பகத்தன்மையை குறைத்திருப்பதாக உணர்கிறேன்.
லட்சக்கணக்கான இன உணர்வுள்ள தொண்டர்கள் இந்த இயக்கத்திற்காக அர்ப்பணிப்பு உணர்வுடன் உழைத்து வருகிறார்கள். அவர்கள் மனதில் எதிர்காலத்தைப் பற்றிய அச்சமும், தங்களுடைய உழைப்பு வீணாகி விடுமோ என்ற கவலையும் ஏற்பட்டுள்ளது. அதேபோன்ற மனநிலையில் நானும் இருக்கிறேன்.
எனவே இந்த இயக்கத்தில் தொடர்ந்து பணியாற்ற தகுந்த சூழ்நிலை இல்லாத காரணத்தை உணர்ந்து இயக்கத்தின் அடிப்படை உறுப்பினர் உள்ளிட்ட அனைத்து பொறுப்புக்களில் இருந்தும் விலகுவதென தீர்மானித்துள்ளேன். எனவே இதை ஏற்றுக்கொள்ளும்படி கேட்டுக்கொள்கிறேன்.
மதிமுகவில் இருந்து மாவட்ட செயலாளர்கள், கட்சி நிர்வாகிகள் ஒவ்வொருவராக விலகி வரும் நிலையில் இமயம் டிவி நிறுவனர் ஜெபராஜ் விலகியுள்ளது கட்சி வட்டாரத்தில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.












Click it and Unblock the Notifications