2 லட்சம் பேர் வந்து போகும் கோயம்பேடு பஸ் ஸ்டாண்ட்டில் 2013ல் 110 பேர் மரணம்
சென்னை: தினசரி கிட்டத்தட்ட 2 லட்சம் பேர் வந்து போகும் சென்னை கோயம்பேடு ஒருங்கிணைந்த புறநகர் பேருந்து நிலையத்தில் கடந்த ஆண்டு 110 பேர் இறந்துள்ளனர்.
இவர்களில் பெரும்பாலானோர் வயது முதிர்ந்தவர்கள். அவர்களில் பெரும்பாலானோர் குடும்பத்தினரால் கைவிடப்பட்டவர்கள். அனாதரவாக பஸ் நிலையத்தில் மரணமடைந்தவர்கள் இவர்கள்.
இவர்களில் 100 பேரின் உடல்களை காவல்துறையினரை பொறுப்பேற்று உரிய முறையில் அடக்கம் செய்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.

தொடர் மரணங்கள்
இதுகுறித்து கோயம்பேடு பஸ் நிலைய போலீஸ் இன்ஸ்பெக்டர் சாம் வின்சென்ட் கூறுகையில், கோயம்பேடு பஸ் நிலையத்தில் உயிரிழப்பவர்கள் அதிகரித்தவண்ணம் உள்ளனர். பெரும்பாலும் முதியவர்கள்தான் இங்கு இறக்கிறார்கள். அவர்கள் பெரும்பாலும் குடும்பத்தினரால் கைவிடப்பட்டவர்கள் ஆவர்.

முதியோர்களைக் கண்காணிக்கும் போலீஸ்
கோயம்பேடு பஸ் நிலையத்தில் தன்னந்தனியாக, அனாதரவாக திரியும் முதியவர்களைப் போலீஸார் கண்காணித்து விசாரிக்கிறார்கள். அவர்களில் பலர் மீட்கப்பட்டு காப்பகம் உள்ளிட்ட இடங்களுக்கு அனுப்பப்படுகிறார்கள். இறந்தவர்களையும் மீட்டு உரிய முறையில் அடக்கம் செய்ய காவல்துறை நடவடிக்கை எடுக்கிறது.

காவல்துறையின் இரக்க குணம்
காவல்துறை இந்த விஷயத்தில் மிகவும் அக்கறையுடன் செயல்படுகிறது. எங்களது காவலர்கள் இதையும் தங்களது பணியின் ஒரு பகுதியாக நினைத்து செயல்படுகின்றனர். இறந்தவர்களை உரிய முறையில் கெளரவமான முறையில் அடக்கம் செய்வதை நாங்கள் சேவையாக கருதுகிறோம்.

அனைவரையும் கண்காணிப்பது சிரமம்
கோயம்பேடு பஸ் நிலையத்திற்கு ஒரு நாளைக்கு சராசரியாக 2 லட்சம் பேர் வந்து செல்கிறார்கள். 800க்கும் மேற்பட்ட பேருந்துகள் இயங்குகின்றன. இங்கு வரும் அனைவரையும் கண்காணிப்பது எங்களுக்கு மிகவும் சவாலான பணியாகும். ஆனாலும் எங்களால் முடிந்தவரை சிறப்பாக செயல்பட முயற்சிக்கிறோம். இறந்தவர்களை அடையாளம் காண்பதுதான் மிகவும் கடினமாக இருக்கிறது.

பிளாட்பாரங்களில் மரணம்
பல முதியவர்கள் பிளாட்பாரங்களில் வந்து தங்குகிறார்கள். அவர்களில் பலர் உரிய கவனிப்பின்றி, உணவு கிடைக்காம், வயோதிகம், உடல் நலக் குறைவு காரணமாக இறந்து போய் விடுகிறார்கள்.

பஸ்களிலேயே பலர் மரணம்
பலர் கோயம்பேட்டுக்கு வரும் வழியில் பஸ்களிலேயே உயிரிழந்த சம்பவங்களும் நிறைய உள்ளன.அவர்களது உடல்களை மீட்டு உரிய இறுதிச் சடங்குகளைச் செய்ய வேண்டிய பொறுப்பும் எங்களிடமே வருகிறது.

பஸ் ஸ்டாண்ட்டில் விட்டு விட்டுச் செல்லும் கொடியவர்கள்
பலர் தங்களால் கவனிக்க முடியாமல் போகும் முதியவர்களை பஸ் ஸ்டாண்ட்டில் வந்து விட்டு விட்டுச் செல்வது அதிகரித்து வருகிறது. இது மிகவும் அநீதியானது, கொடுமையானது. ஆட்டோவில் வந்து சத்தம் போடாமல் விட்டு விட்டுப் போய் விடுகிறார்கள்.

உடல் ஊனமுற்றவர்கள்தான் அதிகம்
இப்படி விட்டுச் செல்பவர்களில் உடல் ரீதியாக ஊனமுற்றவர்கள்தான் அதிகம் உள்ளனர். அவர்களால் பேச முடியாது, நடக்க முடியாது, காது கேட்காது, எந்த வேலையையும் செய்ய முடியாத நிலையில் இருப்பவர்கள். பார்க்கவே பரிதாபமாக இருக்கும் அவர்களை என்றார் அவர்.

மனதுக்கு அமைதி தருகிறது.. மனிதநேயக் காவலர்
இதுபோல பஸ் நிலையத்தில் உயிரிழக்கும் முதியவர்களை மீட்டு உரிய முறையில் இறுதிச் சடங்குகளைச் செய்யும் பணியில் ஈடுபட்டுள்ள காவலர் செல்வமணி கூறுகையில், முதலில் எனக்குத் தயக்கமாகத்தான் இருந்தது. ஆனால் இப்படிச் செய்வதை இப்போது நான் மனித நேயத்துடன் செய்து வருகிறேன். எனக்கு மனதுக்கு ஒரு ஆத்ம திருப்தி கிடைக்கிறது. ஆனால் ஏன் மக்கள் இப்படி வயதானவர்களை அனாதையாக இங்கு கொண்டு வந்து போட்டு, அவர்களின் மரணத்திற்குக் காரணமாகிறார்கள் என்பதுதான் எனக்கு விடை தெரியாத வேதனைக் கேள்வியாக உள்ளது என்றார்.
மரிப்பது வயோதிகர்கள் மட்டுமல்ல.. மனிதநேயமும்தான்!












Click it and Unblock the Notifications