பணபலம், படைபலத்துடன் சேர்கிறது டிடிவி. தினகரனின் அதிகார பல கனவு!
டிடிவி. தினகரனின் பணபலம் படைபலத்துடன் அதிகார பலம் செலுத்துவதற்கான கனவு ஆர்கே நகர் தேர்தல் மூலம் கைகூடியுள்ளது.
Recommended Video

சென்னை : அதிமுகவின் துணை பொதுச்செயலாளராக அதிகார மையமாக வலம் வர நினைத்த டிடிவி. தினகரனின் எண்ணம் பலிக்காமல் போன நிலையில், சுயேச்சை வேட்பாளராக களமிறங்கி சட்டசபைக்கு மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட பிரதிநிதியாக செல்லும் டிடிவி தினகரன் முதல்வர் பழனிசாமி அரசின் கண்ணில் விரலை விட்டு ஆட்டிப்படைப்பார் என்று தெரிகிறது.
அதிகார மையமாகவே செயல்பட்டு வந்த மன்னார்குடி குடும்பத்தின் கனவுகளை நசுக்கிப் போட நினைத்து காய்களை நகர்த்தி வந்தது பாஜக. அதிமுக அணிகள் பிளவு, சசிகலா குடும்பத்தை ஒதுக்கி வைத்துவிட்டு அதிமுகவின் அணிகளை இணைத்து சாதுர்யமாக செயல்பட்டது என்று செக் மேல் செக் வைத்தது டெல்லி.
ஒரு பக்கம் வழக்குகளின் நெருக்கடி, சசிகலா சிறையில், வருமான வரி சோதனைகள் என்று அடிமேல் அடியாக சோர்ந்து கிடந்தது மன்னார்குடி குடும்பம். ஆனால் இவர்களுக்கு இந்த ஆண்டின் மகிழ்ச்சியான செய்தி என்றால் அது தினகரன் பெற்ற வெற்றியாகத் தான் இருக்கும்.

பண பலம், படை பலத்துடன் அதிகார பலம்
டிடிவி. தினகரனுக்கு இருக்கும் பணபலத்தையும், படை பலத்தையும் தமிழக மக்கள் பார்த்திருக்கிறார்கள். இந்நிலையில் தலைமை இல்லாமல் திண்டாடி வரும் அதிமுகவின் நிலைமையை மாற்றும் சக்தியாகவும், முதல்வர் பழனிசாமியின் ஆட்சிக்கு வேட்டு வைக்கும் அதிகார மையமுமாகவே இவர் பார்க்கப்படுகிறார்.

சட்டசபையில் கால் பதிக்கும் தினகரன்
தினகரனின் பணபலம், படைபலத்துடன் தற்போது அதிகார பலமும் சேர்ந்துள்ளது. இதுவரை தினகரன் தரப்புக்கு முதல்வர் பழனிசாமியை எதிர்த்து போட்டியிட ஒரு திடமான ஆதாரம் இல்லாமல் இருந்தது, பழனிசாமியை சசிகலா தான் முதல்வராகத் தேர்ந்தெடுத்தார், ஆனால் எங்களுக்கே துரோகம் செய்து விட்டார் என்று கூறி வந்தனர்.

இனி தவிர்க்க முடியாது
ஆனால் யார் காலிலும் விழுந்தும் ஆட்சிக்கு வரவில்லை என்று படக்கென்று ஒரு கருத்தை சொல்லி சடக்கென்று சப்ஜெக்ட்டை மாற்றிவிட்டார் பழனிசாமி. தினகரனை ஒதுக்கி வைக்க திட்டம்போட்டதால் இப்போது மக்களின் பிரதிநிதியாக சட்டசபைக்கு வருகிறார் தினகரன்.

என்ன நடக்கப் போகிறதோ?
சட்டசபையில் இனி தினகரனின் குரல் ஒலிக்கப் போகிறது. இவர் பின்னணியில் எத்தனை பேர் அணி திரளப் போகிறார்கள் என்ற எதிர்பார்ப்புக்கு மத்தியில் முதல்வர் பழனிசாமி ஆட்சிக்கு இனி கண்டம் என்பது மட்டும் தற்போதைய நிலையில் தெளிவாகத் தெரிகிறது.












Click it and Unblock the Notifications