திமுகவில் என்ன நடக்குது? ஆளுங்கட்சி கவுன்சிலர்கள் 3 பேர் அதிமுகவுக்கு தாவல்! உட்கட்சி பூசல் எதிரொலி
செங்கல்பட்டு: செங்கல்பட்டு மாவட்டம் மாமல்லபுரத்தில் ஆளுங்கட்சியான திமுகவை சேர்ந்த 3 கவுன்சிலர்கள் அதிமுகவில் இணைந்து அண்ணா அறிவாலயத்துக்கு அதிர்ச்சி கொடுத்துள்ளனர்.

இது தமிழக அரசியல் களத்தில் முக்கியத்துவம் வாய்ந்த நிகழ்வாக கருதப்படுகிறது. ஏனெனில் பொதுவாக எதிர்க்கட்சியை சேர்ந்தவர்கள் தான் ஆளுங்கட்சியில் இணைவார்கள். ஆனால் மாமல்லபுரத்தில் ஆளுங்கட்சியை சேர்ந்த 3 கவுன்சிலர்கள் எதிர்க்கட்சியில் இணைந்து முதல்வர் ஸ்டாலினுக்கு அதிர்ச்சி கொடுத்துள்ளனர்.
மாமல்லபுரத்தை பொறுத்தவரை தமிழகத்தின் முக்கியமான பேரூராட்சிகளில் ஒன்றாகும். வெளிநாட்டு சுற்றுலாப் பயணிகள் அதிகம் வந்து செல்லக்கூடிய இடம் என்பதால் எப்போதுமே மாமல்லபுரம் ஸ்பெஷலான பேரூராட்சி தான். கடந்த 2022 ஆம் ஆண்டு பிப்ரவரி மாதம் நடைபெற்ற நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தலில் 15 வார்டுகளை உள்ளடக்கிய மாமல்லபுரம் சிறப்பு நிலை பேரூராட்சியில் அதிமுக 9 வார்டுகளிலும் திமுக 4 வார்டுகளிலும் மதிமுக 1 வார்டிலும், சுயேச்சை 1 வார்டிலும் வெற்றிபெற்றது.
மாமல்லபுரம் பேரூராட்சி தலைவராக அதிமுகவை சேர்ந்த வளர்மதியும் துணைத் தலைவராக ராகவனும் தேர்வு செய்யப்பட்ட நிலையில் கடந்த மார்ச் மாதம் தலைவர் மற்றும் துணைத் தலைவர் மீது திமுக கவுன்சிலர்கள் நம்பிக்கை இல்லா தீர்மானம் கொண்டு வந்து அவர்களது பதவிகளை பறிக்க காய் நகர்த்தினர். இந்நிலையில் திமுக கவுன்சிலர்கள் சரிதா கோவிந்தராஜ், ஸ்ரீனிவாசன், கெஜலட்சுமி ஆகிய மூன்று பேரும் திமுகவில் நிலவிய உட்கட்சி பூசல் காரணமாக அதிமுகவுக்கு தாவியுள்ளனர்.
அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமியை விரைவில் நேரில் சந்திக்கும் இவர்கள் மூவரும் அவரிடம் வாழ்த்து பெறுவதோடு திமுகவிலிருந்து ஏன் விலகினோம் என்பதை பற்றியும் கூறவுள்ளனர். இந்த நிகழ்வை திமுக தலைமை எளிதாக எடுத்துக்கொள்ளக் கூடாது என்பது குறிப்பிடத்தக்கது. கவுன்சிலர்கள் தானே போனால் போகட்டும் என்று விட்டால் இதே போன்ற நிகழ்வு இன்னும் பல இடங்களில் தொடர் கதையாகும்.

ஆகவே கட்சியை விட்டு 3 கவுன்சிலர்கள் வெளியே செல்லும் அளவுக்கு மாமல்லபுரம் பேரூர் திமுகவில் யார் குடைச்சல் கொடுத்தது, என்ன நடந்தது என்பது பற்றி விசாரணை நடத்த வேண்டிய பொறுப்பு திமுக தலைமைக்கு உள்ளது.












Click it and Unblock the Notifications