சென்னையில் துணிகரம்.. பைனான்சியரை வீடு புகுந்து தாக்கி 100 சவரன் நகை கொள்ளை
சென்னை: பெசன்ட் நகர் பகுதியில் பைனான்சியர் வீடு புகுந்து தாக்குதல் நடத்திய கொள்ளையர்கள் 100 சவரன் நகையுடன் தப்பியோடிய சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
சமீபகாலமாக சென்னையில் கொலை, கொள்ளை அதிகரித்துவிட்டது. இதுகுறித்த ஒன்இந்தியா செய்தியை சுட்டிக்காட்டி திமுக தலைவர் கருணாநிதி கடந்த சனிக்கிழமை அறிக்கை வெளியிட்டிருந்தார். அந்த அறிக்கையில், கூலிப்படையினர் கொட்டமடிக்கும் நகரமாக சென்னை மாறிவிட்டதாக அவர் சாடியிருந்தார்.
கொள்ளையர், கொலையாளிகளை பிடிக்க மாநில அரசு உரிய நடவடிக்கை எடுக்கவும் கருணாநிதி வலியுறுத்தியிருந்தார். இந்நிலையில், சென்னையில் இன்று அதிகாலை மற்றொரு துணிகர கொள்ளை சம்பவம் நடந்துள்ளது.
பெசன்ட்நகர், கலாஷேத்திரா காலனியில் வசிப்பவர் மதியரசன். பைனான்சியர். இவரது வீட்டுக்குள் அத்துமீறி நுழைந்த 3 பேர் கொண்ட கொள்ளை கும்பல், மதியரசனை சரமாரியாக தாக்கிவிட்டு, வீட்டுக்குள் இருந்த 100 சவரன் தங்க நகைகள் மற்றும் ரூ.6 லட்சம் ரொக்கப் பணத்தை எடுத்துக்கொண்டு தப்பியோடிவிட்டது.
நகரின் முக்கிய பகுதியொன்றில் நடந்த இந்த துணிகர கொள்ளை சம்பவம் சென்னைவாசிகளுக்கு அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது.