சென்னை மற்றும் புறநகரங்களில் பலத்த மழை
சென்னை: சென்னையில் கிண்டி, மெரினா உள்ளிட்ட பகுதிகளில் கனமழை பெய்தது. அதேபோல் புறநகர் பகுதிகளிலும் பலத்த மழை பெய்தது.
கேரளாவில் தென் மேற்கு பருவமழை தீவிரம் அடைந்துள்ளதையொட்டி மேற்கு தொடர்ச்சி மலையை ஒட்டியுள்ள நெல்லை, தேனி, கோவை மாவட்டங்களில் மழை பெய்து வருகிறது.
வெப்பச்சலனம் காரணமாக அடுத்த 24 மணி நேரத்தில் (இன்று) தமிழகம் மற்றும் புதுச்சேரியில் ஓரிரு இடங்களில் மழையோ அல்லது இடியுடன் கூடிய கன மழையோ பெய்ய வாய்ப்பு உள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்திருந்தது.
சென்னை மற்றும் அதன் புறநகர் பகுதிகளில் வானம் மேகமூட்டத்துடன் காணப்படும். மாலை அல்லது இரவு நேரங்களில் ஒரு சில இடங்களில் இடியுடன் கூடிய கனமழை பெய்வதற்கு வாய்ப்பு உள்ளதாக தெரிவிக்கப்பட்டிருந்தது.
இந்நிலையில், சேப்பாக்கம், அசோக் பில்லர், சூளைமேடு, வடபழனி, நுங்கம்பாக்கம், உள்ளிட்ட பகுதிகளில் கனமழை ஈக்காட்டுத்தாங்கல், நெற்குன்றம், எழும்பூர், அண்ணாநகர் உட்பட பல்வேறு பகுதிகளில் கனமழை பெய்தது. மேலும் திருவள்ளூர், அம்பத்தூர், செங்குன்றம், பாடியநல்லூர், திருமுல்லைவாயல் சுற்று வட்டார பகுதிகளில் மழை பெய்து வருகிறது.