எப்ப விடிவு?... கதிராமங்கலத்தில் 71ஆவது நாளாகத் தொடரும் அறப் போராட்டம்!
கதிராமங்கலத்தில் இருந்து ஓ.என்.ஜி.சி நிறுவனம் என்ற கோரிக்கையுடன் மக்கள் 71ஆவது நாளாகப் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.
தஞ்சை: கதிராமங்கலத்திலிருந்து ஓ.என்.ஜி.சி நிறுவனம் வெளியேற வேண்டும் என்ற கோரிக்கையை வலியுறுத்தி மக்கள் தொடர்ந்து 71-ஆவது நாளாக போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.
தஞ்சை மாவட்டம் கதிராமங்கலத்தில் ஓ.என்.ஜி.சி நிறுவனம் எண்ணெய் எடுக்கும் பணியைச் செய்து வருகிறது. இதனால் விவசாயம் பாதிக்கப்படும், நிலத்தடி நீர் நாசமடையும் எனக் கூறி, ஒ.என்.ஜி.சி நிறுவனத்துக்கு எதிராக மக்கள் போராட்டம் நடத்தி வருகின்றனர்.
மேலும், சில வாரங்களுக்கு முன்பு கதிராமங்கலத்தில் நடைபெற்ற போராட்டத்தின் போது 10 பேர் கைது செய்யப்பட்டனர். அவர்களுக்கு ஜாமீன் வழங்கப்படாததால் சிறையில் தவித்து வருகின்றனர். அவர்களை விடுதலை செய்ய வேண்டும் என்ற கோரிக்கையை வலியுறுத்தி பல நாட்களாக போராட்டங்களில் ஈடுபட்டும் கைது செய்யப்பட்ட 10 பேரும் விடுதலை செய்யப்படவில்லை.
இந்நிலையில் ஓ.என்.ஜி.சி நிறுவனம் கதிராமங்கலத்தை விட்டு வெளியேற வேண்டும், கைது செய்யப்பட்டவர்களை விடுதலை செய்ய வேண்டும் என்ற கோரிக்கைகளை முன்னிறுத்தி கடந்த மூன்று நாட்களாக உண்ணாவிரதப் போராட்டத்தில் மக்கள் ஈடுபட்டு வருகின்றனர். அதில் 5 பேர் நேற்று மயக்கமடைந்து மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
இந்நிலையில், மக்கள் போராட்டம் 71ஆவது நாளாகத் தொடர்ந்து நடைபெற்று வந்தபோதிலும் இதற்கான தீர்வை மத்திய, மாநில அரசுகள் முன்வைக்கவில்லை என்பது குறிப்பிடத்தக்கது. தற்போது, கதிராமங்கலத்தில் குறுவை சாகுபடிக்கான விவசாய வேலைகள் நடைபெற வேண்டிய சூழலில் மக்கள் போராட்டத்தில் ஈடுபட்டுக்கொண்டிருப்பதால் அவர்களின் நிலைமை இன்னமும் மோசமடையும் என்கின்றனர் உள்ளூர் மக்கள்.