தமிழகத்தில் 18 வயதுக்கு மேற்பட்டோரில் 88 சதவீதம் பேரிடம்தான் ஆதார் அட்டை...
சென்னை: தமிழ்நாட்டில் 18 வயதுக்கு மேற்பட்டோரில் 88 சதவீதம் பேர்தான் ஆதார் அட்டையைப் பெற்றுள்ளனர். மற்ற மாநிலங்களை ஒப்பிடுகையில் இது மிகக் குறைவான சதவீதம்தான் என்று இந்திய பிரத்யேக அடையாள எண் ஆணையம் (யுஐடிஏஐ) தெரிவித்துள்ளது.
யுஐடிஏஐ-க்கு ஒதுக்கப்பட்ட 16 மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களில் தமிழ்நாடு மற்றும் ஒடிஷா மாநிலத்தை தவிர மற்ற மாநிலங்களில் 100 சதவீதத்திற்கும் அதிகமானோர் ஆதார் அட்டை பெற்றுள்ளனர்.

இதுகுறித்து யுஐடிஏஐ அதிகாரி ஒருவர் கூறுகையில், நாடு முழுவதும், 100 சதவீதம் பேருக்கும், ஆதார் அட்டைகளை வழங்கும் நோக்கில், அனைத்து குழந்தைகளுக்கும் அட்டை தருவதில், கவனம் செலுத்தப்படுகிறது.
ஆதார் அட்டை வழங்கும் பணி 2010 செப்., 29ல் துவங்கியது. இன்று வரை, 93 கோடி பேருக்கு வழங்கப்பட்டுள்ளது. இப்பணி, 24 மாநிலங்கள், யூனியன் பிரதேசங்களில் நடந்து வருகிறது. இதில் 16 மாநிலங்களில் 100 சதவீத இளைஞர்கள், அடையாள அட்டைகளை பெற்றுள்ளனர்.
2011-ம் ஆண்டு கணக்கெடுப்பின்படி மக்கள் தொகை கணக்கில் கொள்ளப்படுகிறது. ஆனால், 2015-ல் மக்கள் தொகை அதிகரித்திருக்கும் என்பதால் ஹிமாச்சல பிரதேசம், ஆந்திரா, தெலுங்கானா, பஞ்சாப், கேரளா,ஹரியாணா, சத்தீஸ்கர், சிக்கிம், உள்ளிட்ட மாநிலங்களிலும் பாண்டிச்சேரி, கோவா டெல்லி ஆகிய யூனியன் பிரதேசங்களில் மக்கள் தொகையை விட அதிகமாக, அதாவது வயது வந்தோரில் 100 சதவீதத்துக்கும் அதிகமான சதவீதம் ஆதார் எண்கள் வழங்கப்பட்டுள்ளன.
தமிழகத்தில் 88 சதவீதம் பேர் ஆதார் எண் பெற்றுள்ளனர் என்று அவர் தெரிவித்தார்.
தமிழ்நாட்டில் முழுவதுமாக ஆதார் அட்டை வழங்கப்படாததற்கு காரணம் ஒவ்வொரு குடும்பமும் ஆதார் அட்டைக்கு புகைப்படம் எடுக்க வருகையில் குடும்ப உறுப்பினர்களில் யாரவது விடுபட்டு விடுகின்றனர். மேலும், பெரும்பாலான பெரியவர்கள் ஆதார் பெறதாதற்கு வெளியூர் வேலைக்கு சென்றுவிடுவதே முக்கிய காரணம் என தமிழ்நாடு மக்கள் தொகை கணக்கெடுப்பு துறை இணை இயக்குநர் கிருஷ்ணா ராவ் கூறினார்.












Click it and Unblock the Notifications