வாயில் எலியை கவ்வியப்படி விவசாயிகள் அரை நிர்வாணப் பேரணி.. அடுத்து பாம்புக்கறி போராட்டம்!
வறட்சியால் பாதிக்கப்பட்ட விவசாயிகளுக்கு இழப்பீடு வழங்க வலியுறுத்தி திருச்சியில் விவசாயிகள் மீண்டும் எலிக்கறி சாப்பிடும் போராட்டம் நடத்தினர். அரை நிர்வாணமாக திருச்சி ஜங்ஷனில் இருந்து ரயில் நிலையம் வரை
திருச்சி: வறட்சியால் பாதிக்கப்ப்டட விவசாயிகளுக்கு உடனடியாக இழப்பீடு வழங்கக்கோரி திருச்சியில் விவசாயிகள் இன்று மீண்டும் எலிக்கறி உண்ணும் போராட்டம் நடத்தினர். இதில் பெண்கள் உட்பட ஏராளமான விவசாயிகள் கலந்து கொண்டு பேரணியாக சென்றனர்.
தமிழகத்தில் இந்த ஆண்டு பருவமழை பொய்த்துப் போனதால் கடுமையான வறட்சி ஏற்பட்டுள்ளது. நிலத்தடி நீரும் பாதிக்கப்பட்டுள்ளதால் சாகுபடி பாதிக்கப்பட்டுள்ளது.

பயிர்கள் கருகியதைக் கண்டு மனமுடைந்து மாரடைப்பு ஏற்பட்டும் தற்கொலை செய்து கொண்டும் உயிரிழந்த விவசாயிகளின் எண்ணிக்கை 100 ஐ தாண்டியுள்ளது. வரலாற்றில் எப்போதும் இல்லாத அளவுக்கு இந்த ஆண்டு விவசாயிகள் உயிரிழப்பு அதிகரித்துள்ளது.
இந்நிலையில் வறட்சியால் பாதிக்கப்பட்ட விவசாயிகளுக்கு உடனடியாக நிவாரணம் வழங்கக்கோரி திருச்சியில் அய்யாக்கண்ணு தலைமையில் விவசாயிகள் எலிக்கறி உண்ணும் போராட்டம் நடத்தினர். அப்போது வாயில் எலியை கவ்வியப்படி திருச்சி ஜங்ஷனில் இருந்து ரயில்வே நிலையம் வரை அவர்கள் அரை நிர்வாணமாக பேரணி சென்றனர்.
இதில் பெண்கள் உட்பட ஏராளமான விவசாயிகள் கலந்து கொண்டனர். அப்போது பேசிய விவசாயிகள் தலைவர் அய்யாக்கண்ணு, "விவசாயிகளுக்கு உடனடியாக நிவாரணம் வழங்க அரசு நடவடிக்கை எடுக்காவிட்டால் வரும் 7ஆம் தேதி தலைமைச்செயலகத்தை முற்றுகையிட்டு பாம்புக்கறி போராட்டம் நடத்தப்படும் என்றார்.
அப்போதும் அரசு நடவடிக்கை எடுக்காவிட்டால் மார்ச் 15ஆம் தேதி டெல்லியில் போராட்டம் நடத்தப்படும். செத்தாலும் சாவோமே தவிர விவசாயிகள் பிரச்சனைக்கு தீர்வு கிடைக்காமல் ஊர் திரம்ப மாட்டோம் என்றும் அய்யாக்கண்ணு கூறினார்.












Click it and Unblock the Notifications