அதுவா? இதுவா? எந்த பேரம் படியும்?
சென்னை: அரசியல்ல இதெல்லாம் சாதரணமப்பா என்று கவுண்டமணி ஒரு படத்தில் சொல்லுவார். அரசியலில் நிரந்தர எதிரியுமில்லை. நிரந்தர நண்பனும் இல்லை.
அப்படித்தான் போன தேர்தல்ல ஒளிக் கதிரை மறைக்க எதிர் தரப்போடு கூட்டணி வைத்தார் தலைவர். ஆனால் இம்முறை பல தரப்பினரை குழப்பிக் கொண்டிருக்கிறார், கடந்த முறையைப் போலவே.
எல்லா பக்கமும் பேச்சும் பேரமும் நடந்து கொண்டுதான் இருக்கிறதாம்.
ஒளிக் கதிர் சார்பாக பேச வருபவர்களிடம் தனது உறவினருக்கு ராஜ்யசபா சீட் கேட்கும் அதே நேரத்தில் போட்டியிடும் தொகுதிகளை கூடுதலாக கேட்பதாகவும் அதற்கு பதில் சொன்ன ஒளிக் கதிர் தரப்போ, ராஜ்யசபா சீட்டுக்கு ஓகே... ஆனா... தொகுதிகள்தான் என்று இழுக்கிறதாம்.
'இந்த மடம் இல்லாட்டி சந்தை மடம்' என்று ஒரு பழமொழி சொல்வார்களே அந்த கதையைப் போல தன்னை எதிர்பார்த்து காத்திட்டு இருக்கிற பலமான தரப்பிடம், ஒரு ராஜ்யசபா எம்.பி சீட்... தேசிய மகளிர் ஆணைய பதவி, கூடவே சட்டசபை தேர்தல் செலவுக்கு ஒரு 100 கோடி கொடுக்கணும்னு டிமாண்ட் வச்சிருக்கிறாராம் தலைவர். அவர்களும் என்ன பதில் சொல்வது என்று தெரியாமல் விழி பிதுங்குகிறார்களாம்..
இந்த விவரம் எல்லாம் தெரிந்தாலும் நம்ம கூட வர மாட்டாரா என்று இன்னொரு தரப்பும் ஆசைப்பட்டுக் கொண்டிருக்கிறது.