”ஜெ. சிகிச்சை சிடி”க்காகவே ரெய்டு... சசி குடும்பத்துக்காக வரிந்து கட்டும் இன்பத் தமிழன் இவர்தான்!
ஜெயலலிதாவின் சிகிச்சை தொடர்பான சிடியை கைப்பற்றவே வருமான வரித்துறை ரெய்டு நடக்கிறது என அதிரவைத்திருக்கும் இன்பத் தமிழன், தமிழக அரசியலை கலக்கிய தாமரைக்கனியின் மகன்.
Recommended Video

சென்னை: சசிகலா குடும்பம் சம்பாதிக்கவே இல்லை; சொத்து குவிக்கவே இல்லை; தற்போதைய ஐடி சோதனை என்பது ஜெயலலிதா சிகிச்சை தொடர்பான சிடியை கைப்பற்றி அழிப்பதற்காக மட்டுமே என கூறி அதிர வைத்திருக்கிறார் முன்னாள் அமைச்சர் இன்பத் தமிழன்.
எம்ஜிஆரின் முரட்டு பக்தராக இருந்தவர் தாமரைக்கனி. விருதுநகர் மாவட்ட அதிமுகவில் அசைக்க முடியாதவராக இருந்தார். சட்டசபையில் தாமரக்கனியின் நடவடிக்கைகள் எப்போதும் ரணகளமானவைதான்.
1991-ல் அதிமுக ஆட்சிக் காலத்தில் பாமக எம்.எல்.ஏ.வாக இருந்தவர் பண்ருட்டி ராமச்சந்திரன். சட்டசபையில் ஆளுநர் உரையாற்றுவதற்கு குறுக்கீடாக பண்ருட்டி ராமச்சந்திரன் எழுந்து நின்று பேசிக் கொண்டிருந்தார்.

தாமரைக்கனியின் செல்ல தட்டு
அப்போது தம்முடைய இருக்கையை விட்டு எழுந்து வந்து பண்ருட்டியாருக்கு பின்னால் நின்று கொண்டார் தாமரைக்கனி. திடீரென பண்ருட்டி ராமச்சந்திரன் தோளில் ஓங்கி தட்டினார் தாமரைக்கனி. இதனால் சட்டசபையில் சலசலப்பு ஏற்பட்டது. இதையடுத்து அப்போது இருவருமே சட்டசபையில் இருந்து 3 நாட்கள் சஸ்பென்ட் செய்யப்பட்டனர்.

வீரபாண்டியார் மூக்கு உடைப்பு
இதேபோல 1999-ல் திமுக ஆட்சிக் காலத்தில் சட்டசபையில் மற்றொரு சம்பவம் நடந்தது. அமைச்சராக இருந்த வீரபாண்டி ஆறுமுகத்தில் ஓங்கி ஒரு குத்துவிட்டார் தாமரைக்கனி. அவர் அணிந்திருந்த மிகப் பெரிய சைஸ் மோதிரம் குத்தியதால் வீரபாண்டி ஆறுமுகம் மூக்கு உடைந்து ரத்தம் கொட்டியது. அதற்கு முன்னதாக அதிமுகவில் தமக்கு போட்டியாக இருந்த சாத்தூர் ராமச்சந்திரன் மீது ஆசிட் வீசினார் தாமரைக்கனி என்ற புகாரும் எழுந்தது.

தாமரைக்கனியை எதிர்த்த இன்பத்தமிழன்
இப்படி தமிழக அரசியலில் தடலாடி பேர்வழியாக இருந்தவர் தாமரைக்கனி. ஒருகட்டத்தில் தாமரைக்கனி அதிமுகவை விட்டு விலகி திமுகவில் இணைந்தார். அப்போது தாமரைக்கனிக்கு எதிராக ஜெயலலிதாவால் கொம்பு சீவிடப்பட்டவர் அவரது மகன் இன்பத் தமிழன்.

அமைச்சரான இன்பத் தமிழன்
தாமரைக்கனியை எதிர்த்து அவரது மகன் இன்பத் தமிழனையே நிற்க வைத்தார் ஜெயலலிதா. இன்பத் தமிழன் ஜெயித்து அமைச்சராகவும் ஆனார். தம்முடைய அப்பா இன்ஷியலே வேண்டாம் எனவும் இன்பத் தமிழன் பிரகடனம் செய்ததெல்லாம் அரசியல் அதகளம். அப்படி அதிதீவிர விசுவாசியாக இருந்த இன்பத் தமிழனும் ஒருகட்டத்தில் அதிமுகவை விட்டு எஸ்கேப்பாகி திமுகவில் இணைந்தார்.

தினகரனால் மறுவாழ்வு
3 ஆண்டுகாலம் திமுகவில் இருந்துவிட்டு ஜெயலலிதாவை சந்தித்து மீண்டும் அதிமுகவில் இணைந்து கொண்டார். ஆனால் கடந்த 11 ஆண்டுகாலமாக இன்பத் தமிழன் ஓரம்கட்டப்பட்ட நிலையில்தான் இருந்து வந்தார். அதிமுக அணிகள் உடைந்த பின்னர் தினகரன் அணிக்கு இன்பத் தமிழன் தாவினார். திடீரென இன்பத் தமிழனை அதிமுக அம்மா கட்சியின் எம்ஜிஆர் இளைஞரணிச் செயலர் பொறுப்பில் நியமித்தார் தினகரன்.

இன்பத் தமிழனை நம்பும் தினகரன்
விருதுநகர் மாவட்டத்தில் தங்களுக்கும் ஒரு பிடி இருக்க வேண்டும் என்பதற்காக இன்பத் தமிழனை லைம் லைட்டுக்கு கொண்டு வந்தார் தினகரன். இதனால் தற்போது தினகரன் வீடே கதி என இருக்கிறார். மீடியாக்களிடமும் சசிகலா குடும்பத்துக்காக வரிந்து கொண்டு பேசிக் கொண்டிருக்கிறார். போகிற போக்கைப் பார்த்தால் இன்பத் தமிழன் இன்னொரு ரவுண்டுக்கு ரெடியாகிவிட்டார் என்றே தெரிகிறது.












Click it and Unblock the Notifications