யாரையும் விட்டுவைக்காத அதிகாரிகள்.. மன்னார்குடியில் திவாகரன் கல்லூரி மாணவிகளிடமும் சோதனை!
திவாகரனுக்கு சொந்தமான பெண்கள் கல்லூரியில் நேற்று நடத்த சோதனையில் அந்த கல்லூரியில் படிக்கும் மாணவிகளையும் அதிகாரிகள் சோதனை செய்து இருக்கின்றனர்.
மன்னார்குடி: திவாகரனுக்கு சொந்தமான பெண்கள் கல்லூரியில் நேற்று நடத்த சோதனையில் அந்த கல்லூரியில் படிக்கும் மாணவிகளையும் அதிகாரிகள் சோதனை செய்து இருக்கின்றனர். இந்த நிலையில் இன்றும் அங்கு சோதனை தொடர்ந்து நடக்கிறது.
நேற்று முதலில் சோதனை தொடங்கிய போது விடுதியில் இருந்த மாணவிகள் பலர் வெளியே செல்ல முடியாமல் கடும் சிரமத்திற்கு உள்ளாகினர். அந்த கல்லூரியில் சோதனை நடந்ததால் மதியத்துடன் கல்லூரிக்கு விடுமுறை விடப்பட்டது.
மன்னார்குடி கல்லூரியில் சோதனை
தமிழ்நாடு முழுக்க மொத்தம் 190 இடங்களில் வருமான வரித்துறை அதிகாரிகள் திடீர் சோதனை நடத்தி வருகின்றனர். மன்னார்குடியில் மட்டும் மொத்தம் 10 இடங்களில் நேற்று சோதனை நடத்தப்பட்டது. மன்னார்குடியில் சசிகலா தம்பி திவாகரன் ஆதிக்கம் செலுத்திவரும் அனைத்து இடங்களிலும் சோதனை நடந்தது.
காலை 7.30 மணிக்கு சரியாக திவாகரனுக்கு சொந்தமான கல்லூரியில் வருமான வரித்துறையினர் சோதனையை தொடங்கினர்.
கல்லூரி தேர்வும் நடந்தது
சோதனை காரணமாக நேற்று முதலில் கல்லூரி நடக்குமா என்ற சந்தேகம் நிலவி வந்தது. ஆனால் கல்லூரியில் தேர்வு இருந்த காரணத்தால் அதிகாரிகள் அனுமதி வழங்கினர். நேற்று சோதனை நடந்த அதே சமயத்தில் மாணவிகளுக்கு தேர்வுகளும் நடத்து இருக்கிறது. தேர்வு முடிந்ததும் மாணவிகள் மதியம் வீட்டுக்கு கிளம்பினர்.
மாணவிகளும் சோதனை செய்யப்பட்டனர்
கல்லூரி முடித்து வீட்டுக்கு செல்லவிருந்த மாணவிகளின் பைகளையும், டிபன் பாக்ஸ்களையும் பெண் அதிகாரிகள் சோதனை இட்டனர். அதேபோல் ஹாஸ்டலிலும் பெண் அதிகாரிகள் சோதனை செய்தனர். கல்லூரியில் இருந்து எந்தவிதமான ஆவணங்களும் வெளியே செல்லாமல் அதிகாரிகள் கவனமாக இருந்தனர்.
அனைவரும் வரிசையாக நிற்க வைக்கப்பட்டு முறையாக சோதனை செய்யப்பட்டனர்.
விடுதி மூடப்பட்டது
சுத்தரக்கோட்டையில் இருக்கும் அந்த கல்லூரியில் இன்றும் சோதனை நடக்கும் என்பதால் விடுதியில் இருந்த மாணவிகள் வெளியேற்றப்பட்டனர். கல்லூரி விடுதியில் தங்கி இருந்த மாணவிகள் அனைவரும் கடும் சோதனைக்கு பின்பே வீட்டுக்கு அனுப்பப்பட்டனர். இந்நிலையில் இன்றும் யாரையும் ஹாஸ்டலுக்கு திரும்ப வேண்டாம் என் கல்லூரி நிர்வாகம் கூறி இருக்கிறது.