அன்புநாதன் வீட்டில் சிக்கிய ரூ.5 கோடி நத்தம் விஸ்வநாதன் குடும்பத்துக்கு சொந்தம் - வருமானவரித்துறை
சென்னை: கரூரில் அன்புநாதன் வீட்டில் இருந்து கைப்பற்றப்பட்ட பணம் ரூ.5 கோடி முன்னாள் அமைச்சர் நத்தம் விஸ்வநாதனுக்குரிய என்று வருமான வரித்துறை தெரிவித்துள்ளது. சட்டமன்ற தேர்தலின்போது சிக்கிய பணம் விஸ்வநாதனின் மகன் அமர்நாத் அனுப்பியது உறுதியாகியுள்ளதாகவும் கூறியுள்ளது.
ஆட்சி யில், மின்சாரம், மதுவிலக்கு மற்றும் ஆயத்தீர்வை அமைச்சராக இருந்தவர், நத்தம் விஸ்வநாதன். திண்டுக்கல் மாவட்ட செயலர் உட்பட, கட்சி பொறுப்புகளிலும் இருந்தார். அ.தி.மு.க.,வில் செல்வாக்கு பெற்ற, ஐவர் அணியில் இரண்டாவது இடத்தில் இருந்தார்.

2016ம் ஆண்டு அதிமுக ஆட்சி முடிவில், அளவுக்கு அதிகமாக சொத்து சேர்த்ததாக அவர் மீது புகார் எழுந்தது. அதனால், கட்சி தலைமையின் கோபத்திற்கு ஆளானார். சட்டசபை தேர்தலில், அவர் கேட்ட நத்தம் தொகுதிக்கு பதிலாக, ஆத்துார் தொகுதி வழங்கப்பட்டது.
அன்புநாதன் வீட்டில் ரெய்டு
சட்டசபைத் தேர்தல் நேரத்தில் நடந்த சோதனையில், கரூர் மாவட்டத்தில், பைனான்சியர் அன்புநாதன் என்பவர் சிக்கினார். அவருக்கு சொந்தமான குடோனில் அதிகாரிகள் சோதனை நடத்தி, கோடிக்கணக்கான ரூபாய் பறிமுதல் செய்தனர். அப்போது அன்புநாதனுக்கும், நத்தம் விஸ்வநாதன் மகன் அமர்நாத்துக்கும் இடையே, வர்த்தக தொடர்பு இருப்பதாக தகவல் வெளியானது.
நத்தம் விஸ்வநாதன் தோல்வி
தேர்தலில், நத்தம் விஸ்வநாதன் தோல்வியடைந்தார். அதைத் தொடர்ந்து, அவரது மாவட்ட செயலர் பதவி பறிக்கப்பட்டது. அத்துடன் அவரது அரசியல் எதிர்காலம் பறிபோனதாக கருதப்பட்ட நிலையில், மீண்டும் அவருக்கு அமைப்பு செயலர் மற்றும் செய்தித் தொடர்புக்குழு உறுப்பினர் பதவியை, அ.தி.மு.க. தலைமை வழங்கியது.
அன்புநாதன் யாருக்கு பினாமி
அன்புநாதன் வீட்டில் வருமான வரித்துறை அதிகாரிகள் ரூ.5 கோடி பணத்தை பறிமுதல் செய்த போது பல ஆவணங்கள், டைரிகள் சிக்கியது. அப்போதுதான் அன்புநாதன் முக்கிய விஐபிக்களுக்கு பினாமியாகவும், கருப்பு பணத்தை மாற்றும் வேலையையும் செய்து வந்த தகவல் வருமான வரித்துறைக்கு தெரியவந்தது. அதைத் தொடர்ந்து அவரது 2 செல்போன்களை வருமான வரித்துறை அதிகாரிகள் ஆய்வு செய்தனர்.
அதில் தற்போது உள்ள மூத்த அமைச்சர்கள், ஒரு எம்பி, முன்னாள் அமைச்சர் நத்தம் விஸ்வநாதன் ஆகியோர் தொடர்ந்து பேசி வந்தது தெரியவந்தது. அதில், சென்னை மேயர் சைதை துரைசாமி மற்றும் அவரது மகன் வெற்றி ஆகியோரும் தொடர்ந்து பேசி வந்தது தெரியவந்தது.
பொறி வைத்து பிடித்த அதிகாரிகள்
மேலும், அன்புநாதன் வீட்டில் பெங்களூரில் மடிவாலா பஸ் நிலையம் அருகே உள்ள ஒரு இடத்தை ரூ.55 கோடிக்கு அன்புநாதனுக்கு மேயர் துரைசாமி தனது மகன் வெற்றி மூலம் விற்பனை செய்ததற்கான ஆவணங்கள் சிக்கியதாக கூறப்படுகிறது. இந்த ஆவணங்கள் மற்றும் அன்புநாதனிடம் பல மாதங்களாக துரைசாமி, வெற்றி ஆகியோர் பேசிய பேச்சுகளை தீவிரமாக ஆய்வு செய்து வந்தனர். அப்போது மேயர் மற்றும் அவரது மகன் ஆகியோர் கடந்த 5 ஆண்டுகளில் அசுர வளர்ச்சி பெற்றிருப்பது அவர்களின் பேச்சை ஆய்வு செய்ததில் கிடைத்த தகவலை வைத்து வருமான வரித்துறையினர் ஆதாரங்களை சேகரித்தனர்.
40 இடங்களில் வருமான வரி சோதனை
இந்நிலையில், நத்தம் விஸ்வநாதன் மற்றும் அவரது உறவினர் வீடுகளில், வருமான வரித்துறையினர், திங்கட்கிழமையன்று அதிரடி சோதனை நடத்தினர் இதனையடுத்து அவரது பதவிகளை உடனடியாக பறித்தார் ஜெயலலிதா. அதே நாளில் சென்னை மேயர் சைதை துரைசாமியின் சிஐடி நகர் மெயின் ரோட்டில் உள்ள வீட்டில் வருமான வரித்துறையினர் சோதனை நடத்தினர். 40 இடங்களில் வருமான வரித்துறை அதிகாரிகள் சோதனை நடத்திய நிலையில் கடந்த சில தினங்களாகவே அதிகாரிகள் நத்தம் விஸ்வநாதன் மகனிடம் தொடர்ந்து விசாரணை நடத்தி வந்தனர்.
கரூர் அன்புநாதனுக்குச் சொந்தம்
இந்த நிலையில் கரூரில் அன்புநாதன் வீட்டில் இருந்து கைப்பற்றப்பட்ட பணம் ரூ.5 கோடி முன்னாள் அமைச்சர் நத்தம் விஸ்வநாதனுக்குரிய என்று வருமான வரித்துறை தெரிவித்துள்ளது. சட்டமன்ற தேர்தலின்போது சிக்கிய பணம் விஸ்வநாதனின் மகன் அமர்நாத் அனுப்பியது உறுதியாகியுள்ளதாகவும் கூறியுள்ளது. தற்போது நடைபெற்ற சோதனையில் நத்தம் விஸ்வநாதன் வீட்டில் இருந்து ரூ.65 லட்சம் கைப்பற்றப்பட்டதாகவும் வருமான வரித்துறை தெரிவித்துள்ளது. மேலும் கீர்த்திலால் குழுமத்தில் நடந்த சோதனையில் ரூ.2.5 கோடி கைப்பற்றப்பட்டு என்றும் கூறப்பட்டுள்ளது.












Click it and Unblock the Notifications