செட்டி நாடு குழுமங்களில் 4வது நாளாக இன்றும் வருமான வரி ரெய்டு! தங்கம், ரொக்க பணம் பறிமுதல்!!
சென்னை: செட்டிநாடு குழுமங்களில் இன்றும் 4வது நாளாக வருமான வரித்துறை அதிகாரிகள் தொடர்ந்து சோதனை நடத்தி வருகின்றனர். இந்த சோதனையில் கணக்கில் வராத ரொக்க பணம் மற்றும் பெருமளவிலான தங்கம் பறிமுதல் செய்யப்பட்டுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
தொழிலதிபர் எம்.ஏ.எம். ராமசாமிக்கு சொந்தமானது செட்டிநாடு குழுமம். எம்.ஏ.எம்.ராமசாமிக்கும் அவரது மகன் ஐயப்பனுக்கும் இடையே பிரச்சனை ஏற்பட்டுள்ளது. இது தொடர்பாக ஐயப்பன் மீது வழக்கு போடப்பட்டுள்ளது.
இந்நிலையில் கடந்த 3 நாட்களாக சென்னை செட்டிநாடு குழும நிறுவனங்களில் வருமான வரித்துறை அதிகாரிகள் அதிரடி சோதனை நடத்தி வருகின்றனர். ஆந்திரா, மகாராஷ்டிரா மாநிலங்களில் உள்ள செட்டிநாடு குழும அலுவலகங்களிலும் இந்த சோதனை நடைபெற்றது.
இன்று 4வது நாளாக செட்டி நாடு குழும அலுவலகங்களில் வருமான வரித்துறை அதிகாரிகள் சோதன நடத்தினர். இந்த சோதனையில் கணக்கில் வராத ரொக்க பணம் மற்றும் தங்கத்தை அதிகாரிகள் பறிமுதல் செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
கடந்த 6 ஆண்டுகாலமாக செட்டிநாடு குழுமம் வருமான வரி செலுத்தவில்லை என்ற புகாரின் பேரில் இந்நடவடிக்கை மேற்கொள்ளப்படுவதாக அத்துறையின் அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.