போயஸ் கார்டனுக்கு நெருக்கமான சேகர் ரெட்டி வங்கி லாக்கருக்கு சீல்! வருமான வரித்துறை நடவடிக்கை
போயஸ் கார்டனுக்க நெருக்கமான தொழிலதிபர் சேகர் ரெட்டி வீட்டில் வருமான வரித்துறை அதிகாரிகள் அதிரடி சோதனை நடத்தியதை தொடர்ந்து அவரது வங்கி லாக்கருக்கு சீல் வைக்கப்பட்டுள்ளது.
வேலூர்: போயஸ் கார்டனுக்கு நெருக்கமான, தொழில் அதிபர் சேகர் ரெட்டியிடம் ஐடி அதிகாரிகள் பணம் மற்றும் நகை பறிமுதல் செய்த நிலையில் வேலூர் மாவட்டம் காட்பாடியில் உள்ள அவரது வங்கி லாக்கருக்கும், வீட்டில் உள்ள ஒரு லாக்கருக்கும் வருமானவரித்துறை அதிகாரிகள் சீல் வைத்துள்ளனர்.
காட்பாடியை சேர்ந்த தொழில் அதிபர் சேகர் ரெட்டிக்கு காட்பாடி மற்றும் சென்னையில் சொந்த வீடுகள் உள்ளன. கடந்த 8ம் தேதி வருமானவரித் துறை அதிகாரிகள் காட்பாடி மற்றும் சென்னையில் உள்ள சேகர் ரெட்டியின் வீடு, அலுவலகங்களில் சோதனை நடத்தினர்.

அப்போது 177 கிலோ தங்கம் மற்றும் ரூ.131 கோடி ரொக்கப் பணம் கைப்பற்றப்பட்டது. அதில் ரூ.34 கோடி புதிய ரூ.2,000 நோட்டுகளாகும். சேகர் ரெட்டியின் வீட்டில் சோதனை நடந்த அதே நேரத்தில் அவருடைய நண்பர்கள் சீனிவாசலு, பிரேம் ஆகியோரின் வீடுகளிலும் வருமானவரித்துறை அதிகாரிகள் சோதனை நடத்தினர்.
சேகர் ரெட்டி வீட்டில் 177 கிலோ தங்கம் மற்றும் ரூ.131 கோடி ரொக்கம் கைப்பற்றப்பட்டது குறித்து சி.பி.ஐ. ஊழல் தடுப்பு போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர். அதில் பணத்தை பதுக்குவதற்கு உதவிய முக்கிய நபர்களின் பெயர்களையும் சேர்த்துள்ளதாகவும், அவர்களிடம் விசாரணை நடத்த திட்டமிட்டிருப்பதாகவும் கூறப்படுகிறது.
சேகர் ரெட்டி காட்பாடியில் உள்ள தேசிய மயமாக்கப்பட்ட வங்கியில் லாக்கர் பயன்படுத்தி வந்ததை வருமானவரித்துறை அதிகாரிகள் கண்டறிந்தனர். அதைத்தொடர்ந்து அந்த லாக்கருக்கும், அவருடைய வீட்டில் உள்ள ஒரு லாக்கருக்கும் அதிகாரிகள் 'சீல்' வைத்துள்ளது தெரியவந்துள்ளது.












Click it and Unblock the Notifications