ராமமோகன் ராவ் வீடு ரெய்டு.. மத்திய அரசின் விளக்கம் தேவை.. திருமாவளவன்
தலைமைச் செயலாளர் ராமமோகன் ராவ் வீட்டில் வருமானவரிச் சோதனை நடைபெறுவது குறித்து மத்திய அரசு விளக்கம் அளிக்க வேண்டும் என்று திருமாவளவன் கூறியுள்ளார்.
சென்னை: இன்று காலை 6 மணி முதல் தமிழக தலைமைச் செயலாளர் ராமமோகன் ராவ் வீட்டிலும் அவரது உறவினர், நண்பர்கள் வீடுகள் என 13 இடங்களில் வருமானவரித் துறையினர் சோதனை நடத்தி வருகின்றனர். இதுகுறித்து மத்திய அரசு விளக்கம் அளிக்க வேண்டும் என்று விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் தலைவர் தொல். திருமாவளவன் கூறியுள்ளார்.
தமிழக தலைமைச் செயலாளர் ராமமோகன் ராவ் வீட்டில் வருமான வரித்துறைத்துறையினர் இன்று காலை 6 மணி முதல் சோதனை நடத்தி வருகின்றனர். அண்ணாநகரில் உள்ள அவரது வீடு, திருவான்மியூரில் உள்ள அவரது மகன் வீடு மற்றும் உறவினர்கள், நண்பர்களின் வீடுகள் என 13 இடங்களில் வருமானவரிச் சோதனை நடத்தப்பட்டு வருகிறது.

இதுகுறித்து செய்தியாளர்களிடம் பேசிய திருமாவளவன், தமிழக தலைமைச் செயலாளர் ராமமோகன் ராவ் வீட்டில் நடக்கும் சோதனை குறித்து மத்திய அரசு விளக்கம் அளிக்க வேண்டும் என்றும் வருமானவரிச் சோதனை குறித்து மத்திய அரசு வெளிப்படையான அறிக்கை ஒன்றை வெளியிட வேண்டும் என்றும் கூறியுள்ளார்.
இதனிடையே வருமானவரிச் சோதனை நடைபெற்று வரும் ராமமோகன் ராவ் வீட்டின் அருகில் துப்பாக்கி ஏந்திய மத்திய ரிசர்வ் போலீஸ் படையினர் குவிக்கப்பட்டுள்ளனர். தமிழக போலீசாரும், மத்திய ரிசர்வ் போலீசாரும் அந்தப் பகுதியில் குவிக்கப்பட்டுள்ளதால் அந்தப் பகுதி மக்களிடையே அச்சம் நிலவி வருகிறது.












Click it and Unblock the Notifications