இந்தியாவின் முதல் காவல் உதவி ஆய்வாளராக தமிழகத்தைச் சேர்ந்த திருநங்கை நியமனம்!
சென்னை: தமிழக காவல் துறையில் உதவி ஆய்வாளராக தமிழகத்தைச் சேர்ந்த பிரித்திகா யாஷினி என்ற திருநங்கையை நியமிக்க தமிழ்நாடு சீருடைப்பணியாளர் தேர்வு வாரியத்துக்கு சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
சேலம் மாவட்டத்தைச் சேர்ந்த பிரித்திகா யாஷினி, எஸ்ஐ தேர்வுக்காக விண்ணப்பித்த முதல் திருநங்கை. ஆணாக பிறந்தாலும் பின்னர் உடலில் ஏற்பட்ட பெண்மை உணர்வு காரணமாக, அறுவை சிகிச்சையின் மூலம் பெண்ணாக மாறியவர். பிரித்திகா யாஷினி என்று தன் பெயரையும் மாற்றிக்கொண்டார்.

கடந்த சில மாதங்களுக்கு முன் தமிழ்நாடு சீருடைப்பணியாளர் தேர்வு வாரியம் அறிவித்த காவல்துறை உதவி ஆய்வாளர் பணிக்கு இவர் விண்ணப்பித்தார். பிரித்திகா திருநங்கை என்ற காரணத்துக்காக அவருடைய விண்ணப்பம் நிராகரிக்கப்பட்டது.
இதைத்தொடர்ந்து சென்னை உயர் நீதிமன்றத்தில், ரிட் மனு தாக்கல் செய்தார் பிரித்திகா. மனுவை விசாரித்த நீதிமன்றம், எழுத்துத்தேர்வில் பிரித்திகாவை அனுமதிக்க உத்தரவிட்டது. அந்த தேர்வில் பிரத்திகா யாசினி கலந்துகொண்டு தேர்ச்சி பெற்றார். அடுத்து நடந்த உடல் தகுதி தேர்வின் போது, ஓட்டப்பந்தயத்தில் ஒரு நொடி காலதாமதமாக வந்ததாக கூறி, பிரித்திகாவை தகுதி நீக்கம் செய்தது சீருடை பணியாளர் தேர்வாணையம்.
இதை எதிர்த்து மீண்டும் நீதிமன்றத்தில் பிரித்திகா மனு செய்தார். வழக்கு விசாரணைக்கு வந்தபோது, மனுதாரரை நேர்காணலில் அனுமதிக்க வேண்டும் என்று நீதிமன்றம் உத்தரவிட்டது. இந்நிலையில் எழுத்துதேர்வு மற்றும் நேர்முகத்தேர்வில் வெற்றி பெற்றும் தனக்கு பணி வழங்கப்படவில்லை என்று பிரித்திகா உயர்நீதிமன்றத்தில் வழக்குத் தொடர்ந்தார். இந்த வழக்கு சென்னை உயர்நீதிமன்ற நீதிபதி எஸ்.கே.கவுல் மற்றும் புஷ்பா சத்திய நாராயணா முன்பாக நேற்று விசாரணைக்கு வந்தது.
விசாரணையில், தமிழக காவல்துறையில் பணியாற்ற திருநங்கை பிரித்திகா யாசினி முழுதகுதி உடையவர். அவருக்கு எஸ்.ஐ. பணி வழங்க வேண்டும் என்று தமிழ்நாடு சீருடைப் பணியாளர் தேர்வு வாரியத்துக்கு உத்தரவிட்டனர். மேலும், அவர் அர்ப்பணிப்போடும், மற்ற திருநங்கைகளுக்கு உற்சாகம் அளிக்கும் வகையில் இருப்பார். எதிர்காலத்தில் திருநங்கைகள் கலந்து கொள்ளும் வகையில் தேர்வு முறையை மேற்கொள்ள வேண்டும் என்றும் உத்தரவிட்டனர். இந்த உத்தரவின்படி இந்தியாவிலேயே முதல் காவல் உதவி ஆய்வாளராகப் போகும் திருநங்கை பிரித்திகா யாஷினி ஆவார்.












Click it and Unblock the Notifications