இலங்கை மீது இனப்படுகொலை விசாரணை: இந்தியா தீர்மானம் கொண்டு வர ராமதாஸ் வலியுறுத்தல்

இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:-
இனப்படுகொலை:
இலங்கை போர் குறித்து ஜெர்மனியில் விசாரணை நடத்திய நிரந்தர மக்கள் தீர்ப்பாயம் நேற்று அளித்த தீர்ப்பில், இலங்கையில் நடைபெற்றது திட்டமிட்ட இனப்படுகொலை என்று அறிவித்திருக்கிறது. இந்த இன அழிப்புக்கு அமெரிக்கா, இங்கிலாந்து ஆகிய நாடுகள் துணையாக இருந்ததாகவும் தீர்ப்பாயம் கூறியுள்ளது.
இதில் இந்தியாவிற்கு உள்ள பங்கு குறித்த ஆதாரங்கள் கிடைத்திருப்பதாகவும், அவற்றை ஆய்வு செய்து பின்னர் தீர்ப்பளிப்பதாகவும் நிரந்த மக்கள் தீர்ப்பாயம் தெரிவித்திருக்கிறது.
திட்டமிட்ட இனப் படுகொலை:
இலங்கைப் போரின் போது சராசரியாக தினமும் 1000 பேர் வீதம் ஒன்றரை லட்சம் தமிழர்கள் படுகொலை செய்யப்பட்டிருக்கலாம் என்று தெரிவித்துள்ள தீர்ப்பாயம், இது திட்டமிட்ட இனப்படுகொலை தான் என்றும், போருக்கு பிறகும் இலங்கையில் இனப்படுகொலை தொடர்வதாகவும் ஆதாரங்களுடன் கூறியிருக்கிறது.
தமிழீழம்:
தேசிய இனங்களுக்கு சுயநிர்ணய உரிமை உண்டு என ஐ.நா. விதிகளில் குறிப்பிடப்பட்டிருப்பதால், இந்த கருத்தின் அடிப்படையிலேயே இலங்கையில் தமிழர்கள் வாழும் பகுதிகளைப் பிரித்து தமிழீழம் அமைக்க முடியும். இதற்கான ஏற்பாடுகளை ஐ.நா. மேற்கொள்ள வேண்டும் என்று நிரந்தர மக்கள் தீர்ப்பாயமும் அதன் பரிந்துரைகளில் தெரிவித்திருக்கிறது.
தகுந்த நடவடிக்கை:
இலங்கை இனப்படுகொலை தொடர்பான சந்தேக நிழல் இந்தியா மீதும் படிந்துள்ள நிலையில், இனப் படுகொலை குற்றவாளிகளுக்கு தண்டனை பெற்றுத் தருவதன் மூலம் தான் தன் மீதான சந்தேக நிழலை மத்திய அரசு போக்க முடியும். எனவே, இனப்படு கொலைக்கு துணை போகவில்லை என்பதை நிரூபிக்கவும், ஈழத்தமிழர் நலனை பாதுகாக்கவும் கீழ்க்கண்ட நடவடிக்கைகளை மத்திய அரசு மேற்கொள்ள வேண்டும்.
இனப்படுகொலை தீர்மானம்:
ஜெனிவாவில் வரும் மார்ச் மாதம் நடைபெறவுள்ள ஐ.நா. மனித உரிமை ஆணையக் கூட்டத்தில், இலங்கைக்கு எதிராக இனப்படுகொலை விசாரணை நடத்துவதற்கான தீர்மானத்தை இந்தியா கொண்டு வந்து நிறைவேற்ற வேண்டும்.
தேசிய இனமாக அறிவிக்கப்பட்டுள்ள ஈழத் தமிழினம் தங்களுக்கென தமிழீழம் என்ற புதிய நாட்டை உருவாக்குவதற்காக நடவடிக்கைகளை ஐக்கிய நாடுகள் அமைப்பின் மூலம் மேற்கொள்ள வேண்டும்.
இனப்படுகொலை நாள்:
தீர்ப்பாயம் பரிந்துரைத்திருப்பதைப் போல ஈழத் தமிழர்கள் கொத்துக்கொத்தாக படுகொலை செய்யப்பட்ட மே 18 ஆம் நாளை முள்ளிவாய்க்கால் நினைவு நாள் - சர்வதேச இனப்படுகொலைக்கு எதிரான நாள் என்று ஐ.நா. மூலம் அறிவிக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்' என இவ்வாறு அந்த அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.












Click it and Unblock the Notifications