டோர்னியர் விமான பாகங்கள் கிடைத்த பகுதியில் மனித எலும்புகள்... ஐ.ஜி. சர்மா தகவல்
சென்னை: மாயமான டோர்னியர் விமானத்தின் பாகங்கள் கிடைத்த பகுதியில் மனித எலும்புகள் கண்டெடுக்கப் பட்டுள்ளதாக கடலோரக் காவல்படையின் கிழக்குப் பிராந்திய ஐ.ஜி.சர்மா தெரிவித்துள்ளார்.
கடந்த மாதம் இந்திய கடலோரக் காவல் படைக்கு சொந்தமான ‘டோர்னியர்' சிறிய ரக விமானம் ஒன்று ரோந்துப் பணியில் ஈடுபட்டிருந்தபோது, திடீரென மாயமானது. ஒருமாத தேடுதல் வேட்டைக்குப் பின், கடந்தவாரம் மாயமான விமானத்தின் கருப்புப் பெட்டி பிச்சாவரத்தை அடுத்த பரங்கிப்பேட்டை கடற்பகுதியில் இருந்து மீட்கப் பட்டது.
கருப்புப் பெட்டி கிடைத்த இடத்தில் தொடர்ந்து தேடியதில், விமானத்தின் 2 இன்ஜின்கள், இன்ஜினை இயக்க உதவும் உந்துவிசை கருவிகள், வால் பகுதி, பைலட் அறையில் உள்ள குரல் பதிவு சாதனம், லேண்டிங் கியரின் ஒரு பகுதி, உயிர் காக்கும் லைப் ஜாக்கெட் ஆகியவையும் மீட்கப்பட்டன.
இந்நிலையில், விமான பாகங்கள் கிடைத்த பகுதியில் மனித எலும்புகள் கிடைத்துள்ளதாக கடலோரக் காவல்படையில் கிழக்குப் பிராந்திய ஐ.ஜி.சர்மா தெரிவித்துள்ளார்.
இது தொடர்பாக சென்னையில் செய்தியாளர்கள் மத்தியில் அவர் கூறியதாவது:-
மனித எலும்புகள்...
டோர்னியர் விமானத்தின் 90% பாகங்கள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளன. அதேவேளையில், விமான பாகங்கள் கண்டுபிடிக்கப்பட்ட பகுதிக்கு அருகே இருந்து மனித எலும்புகளும்,ஒரு கைக்கடிகாரமும் கண்டெடுக்கப்பட்டுள்ளன. இந்தக் கைக்கடிகாரம் விமானிகளில் ஒருவருடையதாகவே இருக்க வேண்டும் என சந்தேகிக்கிறோம்.
மீட்புப்பணி...
மீட்புப் பணியில் கடலோர காவற்படை வீரர்கள் அயராது ஈடுபட்டனர். அவர்களது முயற்சியாலேயே விமானத்தின் பெரும்பாலான பாகங்கள் கண்டெடுக்கப்பட்டன.
டி.என்.ஏ. சோதனை...
விமானத்தின் உடைந்த பாகங்களும், மனித எலும்புகள் மற்றும் கைக்கடிகாரமும் பத்திரமாக வைக்கப்பட்டுள்ளன. தமிழ்நாடு தடயவியல் நிபுணர் குழுவுக்கு தகவல் அனுப்பியுள்ளோம். அவர்கள் உதவியோடு, கடலில் கண்டெடுக்கப்பட்ட மனித எலும்புகள் டி.என்.ஏ. பரிசோதனைக்கு உட்படுத்தப்படும்.
விமானிகளின் உறவினர்கள்...
டார்னியர் விமானத்தில் இருந்த விமானிகளின் உறவினர்கள் நேரில் வந்து, மீட்கப்பட்ட விமானத்தின் பாகங்களை பார்க்குமாறு கேட்டுக்கொள்கிறேன்.
கருப்புப் பெட்டி...
மீட்கப்பட்ட விமானத்தின் பாகங்கள் தடயவியல் ஆய்வுக்கு அனுப்பப்பட்டு உள்ளது. கறுப்பு பெட்டி மீனம்பாக்கம் விமான நிலையத்தில் வைக்கப்பட்டுள்ளது.
விபத்துக்கான காரணம்...
கறுப்பு பெட்டியை ஆராயும் பணியை தொடங்கி உள்ளோம். இந்தப்பணி முடிவடைய ஒரு வாரம் ஆகும். அதன் பிறகு விபத்துக்கான காரணம் தெரியவரும்" என இவ்வாறு அவர் தெரிவித்தார்.