எண்ணூரில் விபத்துக்குள்ளான கப்பல்கள் சிறைப்பிடிப்பு.. இந்திய கடலோர காவல்படை அதிரடி
எண்ணூரில் விபத்துக்குள்ளான கப்பல்கள் சிறைப்பிடிக்கப்பட்டுள்ளன. இந்திய கடலோர காவல்படை அதிரடி நடவடிக்கை எடுத்துள்ளது.
சென்னை: எண்ணூர் காமராஜர் துறைமுகம் அருகில் இரண்டு கப்பல்கள் மோதிக் கொண்டன. இதில் எண்ணூர் முதல் மாமல்லபுரம் வரையிலான கடலோரப் பகுதிகள் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ள நிலையில், விபத்திற்குள்ளான 2 கப்பல்களை இந்திய கடலோர காவல்படையினர் சிறைபிடித்துள்ளனர்.
கடந்த 28ம் தேதி எண்ணூர் காமராஜர் துறைமுகத்திற்கு கச்சா எண்ணெய் ஏற்றிக் கொண்டு வந்த 'டான் காஞ்சிபுரம்' கப்பல் மீது, குவைத் கப்பல் ஒன்று மோதியது. துறைமுகத்திற்கு 2 கி.மீ. தொலைவில் ஏற்பட்ட இந்த விபத்தால் எண்ணூர் முதல் மாமல்லபுரம் வரை கச்சா எண்ணெய் பரவி கடற்கரை பகுதிகள் பாதிக்கப்பட்டுள்ளன. கடல் வாழ் உயிரினங்களான, மீன், ஆமை உள்ளிட்டவை செத்து மிதந்தன. கடலில் பரவி வரும் எண்ணெய்யை அகற்றும் பணி தொடர்ந்து நடைபெற்று வருகிறது.

இந்நிலையில், தேசிய மீனவர் நலச் சங்கம் சார்பில் பொது நல வழக்கு ஒன்று சென்னை உயர்நீதிமன்றத்தில் தொடரப்பட்டது. அதில், பாதிக்கப்பட்ட மீனவர்களுக்கு 100 கோடி ரூபாய் வரை இழப்பீடு வழங்க வேண்டும். விபத்திற்கு காரணமான கப்பல்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கூறப்பட்டிருந்தது.
இந்த மனு, சென்னை உயர்நீதிமன்ற தலைமை நீதிபதி எஸ்.கே. கவுல் மற்றும் நீதிபதி சுந்தர் முன்பு விசாரணைக்கு வந்தது. அப்போது, கப்பல்கள் மீது உரிய நடவடிக்கை எடுக்க நீதிபதிகள் உத்தரவிட்டனர்.
இந்நிலையில், இந்திய கடலோர காவல்படையினர் விபத்திற்குள்ளான 2 கப்பல்களையும் சிறைப்பிடித்துள்ளனர். இந்த 2 கப்பல்களும் எண்ணூர் துறைமுகத்திற்குட்பட்ட இடத்தில் நிறுத்தி வைக்கப்பட்டுள்ளன. மறு உத்தரவு வரும் வரை 2 கப்பல்களும் விடுவிக்கப்படும்.
ஏற்கனவே, இந்த விபத்தை ஏற்படுத்திய எரிவாயு கப்பல் மீது 6 வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ள நிலையில், 2 கப்பல்கள் சிறைப்பிடிக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.












Click it and Unblock the Notifications