ஒன்றே குலம் என்றும் ஒருவனே தேவன்’ இந்திய யூனியன் முஸ்லிம் லீக் கிறிஸ்துமஸ் வாழ்த்து!
இந்திய யூனியன் முஸ்லிம் லீக் கட்சியின் தலைவர் காதர் மொகிதீன் கிறிஸ்துமஸ் வாழ்த்து தெரிவித்துள்ளார்.
சென்னை: இந்திய யூனியன் முஸ்லிம் லீக் கட்சியின் தலைவர் காதர் மொகிதீன் கிறிஸ்தவ மக்களுக்கு கிறிஸ்துமஸ் வாழ்த்து தெரிவித்துள்ளார்.
உலக முழுவதும் கிறிஸ்துமஸ் பண்டிகை நாளை கொண்டாடப்படுகிறது. இதனை முன்னிட்டு கிறிஸ்தவர்கள் தேவாலயங்களில் சிறப்பு வழிபாடு நடத்தி வருகின்றனர்.

இந்நிலையில் இந்திய யூனியன் முஸ்லிம் லீக் தேசிய தலைவரும், மாநிலத் தலைவருமான பேராசிரியர் கே.எம். காதர் மொகிதீன் கிறிஸ்துமஸ் வாழ்த்துச் செய்தி வெளியிட்டுள்ளார். அதில் தெரிவித்திருப்பதாவது,
கிறிஸ்துவ சகோதர சகோதரிகளுக்கு இதயப்பூர்வமான கிறிஸ்துமஸ் வாழ்த்துக்களை இந்திய யூனியன் முஸ்லிம் லீக் சார்பில் தெரிவிப்பதில் பெருமகிழ்ச்சி அடைகிறோம்.
அகிலத்து மக்கள் அனைவரும் ஆதாம் ஏவாளுக்குப் பிறந்தவர்கள் என்பதால், மானிட சமுதாயம் ஒரு பெரும் குடும்பமே ஆகும்.
அந்த மாபெரும் மனிதக் குடும்பமே, நாடுகளாகவும், இனங்களா கவும், சமுதாயங்களாகவும், குலம் கோத்திரங் களாகவும், தனித் தனிக் குடும்பங்களாகவும், பிரிந்து வாழ்கின்றது.
உண்மையில், எல்லோரும் - நாமும், நமக்கு முன்னிருந்தோரும், நமக்குப் பின்னர் வருவோரும் - ஒரு பெரும் மானிட குடும்ப சாகரமே அன்றி வேறில்லை. இதனைத்தான் தமிழகத்துச் சித்தர்கள் 'ஒன்றே குலம் என்றும் ஒருவனே தேவன்' என்றும் சுருங்கச் சொல்லி விளங்க வைத்துள்ளார்கள்.
இந்தத் தத்துவத்தை எல்லா சமுதாய மக்களும், எல்லா சமயத்தவரும், எல்லா தேசத்தவரும் உணர வேண்டும் என்றே ஏசு பெருமான் போதித்தார்; அதே போதனையையே உலகத் தீர்க்கதரிசிகள் யாவரும் வலியுறுத்தினர்.
சாதிச் சழக்கங்களுக்கும், சமயப் பூசல்களுக்கும், வகுப்பு துவேசங்களுக்கும், இன மோதல்களுக்கும் இதயத்தில் இடமளிக்காமல் வாழும் நன்னெறியில் நிலைத்து நிற்க அனைவரும் பாடுபடுவோம்! இவ்வாறு இந்திய யூனியன் முஸ்லிம் லீக் கட்சியின் தலைவர் பேராசிரியர் கே.எம்.காதர் மொகிதீன் கிறிஸ்துமஸ் வாழ்த்துச் செய்தியில் குறிப்பிட்டுள்ளார்.












Click it and Unblock the Notifications