கீழடிப் பானை எழுத்துகள் கீறல்கள் சங்க கால கல்விப் பரவலாக்கத்திற்கு சான்று: ஆர். பாலகிருஷ்ணன்
சென்னை: கீழடிப் பானை எழுத்துகள் கீறல்கள் என்பவை சங்க கால கல்விப் பரவலாக்கத்திற்கு சான்று என சிந்துசமவெளி ஆய்வாளர் ஆர். பாலகிருஷ்ணன் ஐ.ஏ.எஸ். விளக்கம் அளித்துள்ளார்.
இது தொடர்பாக தமது முகநூல் பக்கத்தில் ஆர். பாலகிருஷ்ணன் எழுதியுள்ளதாவது:
கேள்வி : கீழடியில் கிடைத்திருக்கிற எழுத்துப் பொறிப்புகள் மற்றும் ஏராளமான பானைக்கீறல்கள் எதைக்காட்டுகின்றன? சங்க காலக் கல்விப்பரவலாக்கத்திற்கு இதை ஓர் அடையாளமாகக் கருத இடமுண்டா?
விடை: உறுதியாக இடமுண்டு. கீழடி எழுத்துப் பொறிப்புகள் எழுதப்பட்டதாக கருதப்படும் காலகட்டம் கி.மு ஆறாம் நூற்றாண்டா, ஐந்தாம் நூற்றாண்டா என்பதை விட முக்கியமானது இது தமிழக மண்ணில் முதல் கண்டுபிடிப்பு அல்ல என்பதும் தான். இது தமிழி எழுத்துப் பொறிப்புகள் ஏற்கனவே தமிழ்நாட்டின் பல பகுதிகளில் கிடைத்துள்ளன அவற்றின் காலகட்டம் கி.மு மூன்றாம் - ஐந்தாம் காலகட்டத்தில் ஏற்கனவே பொருத்தப்பட்டுள்ளன.

எனவே இது முதல் முறை அல்ல; இதன் கால நிர்ணயம் கி.மு 6 ஆம் நூற்றாண்டு என்று கணிக்கப்பட்டுள்ளது என்பது தான் புதிய தகவல். ஆனால் என் மட்டில் நான் அதை விட முக்கியமானதாகக் கருதுவது கீழடி வாழ்வியலுக்கும் சங்க இலக்கியத்திற்கும் இடையிலான இணக்கம்.
கல்விப் பரவலாக்கத்தின் முதல் உரைகல் ( you can say " litmus test") கருத்தியல் அடிப்படையிலும் நடைமுறை எதார்த்தத்திலும் கல்வி அனைவருக்குமானதா என்பதே ஆகும். கீழடி பானைக் கீறல்களும் "தமிழி" எழுத்துகளும் யாரால் கீறப்பட்டது அல்லது எழுதப்பட்டது என்பதும் முக்கியம். இவை பேரரசர்களின் கல்வெட்டுகளோ செப்பேடுகளோ இல்லை.
இதில் "அரசாங்கத்தின்" கரங்கள் இல்லை. அது பானையை வனைந்த குயவன் எழுதியது என்றால் அது "முதுவாய் குயவ" ( Potter of the ancient wisdom ) என்ற சங்க இலக்கியப் பதிவுக்கு கிடைத்த சான்றிதழ்.
அது பானையை வாங்கிய பலராலும் எழுதப்பட்டது எனில் அது கல்விப் பரவலாக்கத்திற்கு உரைகல். இத்தகைய கல்விப்பரவலாக்கத்திற்கு சங்க இலக்கியம் காட்டும் வாழ்வியலின் அறிவு சார்ந்த அணுகுமுறை ( Knowledge based approach) முக்கியக் காரணம் ஆகும்.

இதற்கு புறநானூற்றில் வரும் ஒரு பாடல் ஒரு சோற்றுப் பதம்.
இதோ அந்தப் பாடல். ( புறநானூறு 183)
"உற்றுழி உதவியும் உறுபொருள் கொடுத்தும்
பிற்றை நிலை முனியாது கற்றல் நன்றே!
பிறப்போரன்ன உடன்வயிற்றுள்ளும்
சிறப்பின் பாலால் தாயும் மனம் திரியும்
ஒரு குடிப் பிறந்த பல்லோருள்ளும்
முத்தோன் வருக என்னாது அவருள்
அறிவுடையோன் ஆறு அரசும் செல்லும்
வேற்றுமை தெரிந்த நாற்பா லூள்ளும்
கீழ்ப்பால் ஒருவன் கற்பின்
மேல் பால் ஒருவனும் அவன் கண்படுமே"
"
-(புறம்-183)
அப்போதே "வேற்றுமை தெரிந்த" சமூகப் படிநிலை முறைகள் தலைதூக்கி இருக்கவேண்டும். ஆனால் கவிஞனாகிய தமிழ் மன்னன் அதிலும் ஆரியப் படை கடந்தவன் என்று பெயர் சூட்டிக் கொண்டவன் ( நெடுஞ்செழியன் என்ற பெயர் தொல் தமிழ்க் கல்வெட்டிலேயே வருகிறது) அறிவுடையோன் காட்டும் வழியில் தான் தனது அரசு செல்லும் என்று தனது கவிதையின் மூலம் அறிவிக்கிறான். கல்விப்பரவலாக்கத்திற்கான அரசு சார்ந்த / ஆவணப்படுத்தப்பட்ட முதல் குரல் எனக்குத் தெரிந்த வரையில் இது தான். இந்த அறிவிப்பு எதிர்பார்ப்போ புனைந்துரையோ இல்லை என்பதை சங்க இலக்கியப் புலவர்களின் சமூகப்பின்னணிகளே சான்றளிக்கும் .
கொற்றவனும்...குயத்தியும்...
கணியனும்...கணக்காயனும்...
குறமகளும்..கொல்லனும்...
வணிகனும்..வண்ணக்கனும்...
சேரனும் சோழனும் பாண்டியனும்...
கூடிப் பாடிய கூட்டியக்கம் தான் சங்கத்தமிழ் என்ற ஆவணக்களஞ்சியம்.
கீழடியில் வெளிவரும் எழுத்துப் பொறிப்புகளும் குயவரோ பானை உரிமையாளரோ கீறிய பானைக் கீறல்களும் இந்தக் கருத்தியலின் இன்னொரு உடல் மொழிதான். இன்னொரு வகையில் சிந்துவெளி வாழ்வியலும் சங்க இலக்கிய வாழ்வியலும் தொன்மத்தின் தொடர்ச்சியாக அடிக்கோடிடும் இயக்கங்களில் / இணக்கங்களில் இதுவும் ஒன்று. எனவே கீழடிப் பானை எழுத்துகள் கீறல்கள் கல்விப்பரவலாக்கத்திற்கு சான்று என்பது சரியான வாதமே
இவ்வாறு ஆர். பாலகிருஷ்ணன் எழுதியுள்ளார்.












Click it and Unblock the Notifications